இரு அணிகளின் பலம்
இந்திய அணியை பொறுத்தவரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ரோகித், கோலி, பண்ட், பும்ரா என முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் ஷிகர் தவான் தலைமையில் புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் நிகோலஸ் பூரண் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான், வங்கதேச அணிகளுடன் ஒருநாள் தொடரை இழந்து, கம்பேக் கொடுக்க காத்துள்ளது.
இந்திய அணிக்கு எச்சரிக்கை
இந்நிலையில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து நிகோலஸ் பூரண் பேசியுள்ளார். அதில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான மனநிலைக்கு வரவில்லை. அது வந்துவிட்டால் தரமான கம்பேக் கொடுப்போம். அந்த வகையில் இந்தியாவுடனான போட்டியின் மூலம் கிரிக்கெட் உலகிற்கு நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் என தகவல் கொடுப்போம்.
ஏமாற்ற முடியாது
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாதது சுலபமாக தெரியலாம். ஆனால் அதை கண்டு நாங்கள் ஏமாறப்போவதில்லை. குறைத்து மதிப்பிடமாட்டோம். ஏனென்றால் அவர்களின் பணிகளை செய்ய பல வீரர்கள் உள்ளனர். எனவே எங்களை பொறுத்தவரையில், கடுமையான போராட்டத்தை இந்தியாவுக்கு எதிராக கொடுப்போம். முடிவு குறித்து எங்களுக்கு கவலையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முதல் போட்டி
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 22ம் தேதியன்று ட்ரினிடாட் க்யூன்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸையும் அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.