டிரிண்டாட் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ஷ்டவசமாக ஒரு விக்கெட் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் ராஜாக்களாக இருந்தார்கள்.
தற்போது வாழ்ந்து கெட்ட ஜமீன் போல் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டிலாவது தங்களுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்த பெருமையை மீட்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பேட்டிங் செய்யவே சோம்பேறித்தனமாக இருப்பது போல் அந்த அணி வீரர்கள் விளையாடினார்கள். குறிப்பாக ஐபிஎல் இல் லக்னோ அணிக்காக விளையாடிய கயல் மேயர்ஸ் ஏழு பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டும் தான் அடித்தார். அதில் சாகல் வீசிய பந்தை எதிர்கொண்ட கயல் மேயர்ஸ், அதனை தடுக்க முயன்ற போது அது காலில் பட்டது.
இதற்கு இந்திய வீரர்கள் அவுட் கேட்க நடுவரும் அவுட் வழங்கினார். ஆனால் மெயர்ஸ் இதற்கு ரிவ்யூ கேட்கலாமா வேண்டாமா என எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனிடம் கூட விவாதிக்காமல் அப்படியே நடந்து பெவிலியன் பக்கம் சென்றார். ஒருவேளை அது அவருக்கு அவுட் என்று தெரிந்திருக்கும் என்பதால் இந்த முடிவு அவர் எடுத்து இருப்பார் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் அதன் பிறகு தொலைக்காட்சி ரிப்ளேவில் அந்த பந்து ஸ்டெம்பில் படாமல் திரும்பியது தெரிய வந்தது. இதற்கு ரிவ்யூ கேட்காமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸ் சோம்பேறித்தனமாக பெவிலிய நோக்கி நடந்து சென்று விட்டார். இதேபோன்று அதிரடியாக விளையாடிய பிராண்டன் கிங்கும் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இந்த நிலையில் அதே ஓவரில் சாஹல் வீசிய பந்து பிராண்டன் கிங் காலில் பட்டது. இது பார்த்தாலே அவுட் என தெளிவாகத் தெரிந்த நிலையில் இதனை தேவையில்லாமல் ரிவ்யூ கேட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒரு ரிவ்யூ வாய்ப்பை இழந்தனர். கிரிக்கெட்டில் தாதாக்கள் என்று அழைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த டி ஆர் எஸ் வாய்ப்பை வீணடித்தது ரசிகர்களுக்கு கடுப்படைய செய்தது.