ட்ரினிடாட்: இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் சேர்த்தார். பின்னர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்தது.

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட் புஜாராவை போல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது இந்திய பந்துவீச்சாளர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையில் அமைந்தது. இதன்பின் வந்த முகேஷ் குமார் வீசிய பந்தில் மெக்கன்சி 32 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென மழை பெய்ய தொடங்கியது.
பின்னர் மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கிய நிலையில், அஸ்வின் வீசிய ஒரு மேஜிக் பந்தில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெயிட் 235 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பிளாக்வுட் ஜடேஜா பந்துவீச்சில் 92 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேற, விக்கெட் கீப்பர் ஜோஷ்வா சில்வா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது. அதனேஸ் 37 ரன்களுடனும், ஹோல்டர் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 4ஆம் நாள் ஆட்டத்தில் முதல் செஷனிற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆல் அவுட் செய்ய முடியவில்லை என்றால், ஆட்டம் டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளது.
இருப்பினும், 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.