செயின்ட் ஜார்ஜியா: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டி இருக்கிறது. இந்தப் போட்டியில் தற்போது ஆஸ்திரேலியா அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இரண்டு நாள் ஆட்டம் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தங்களின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆடி முடித்துள்ளன.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 75 ரன்கள் சேர்த்தார். ஜான் கேம்பல் 40 ரன்கள் எடுத்தார்.

தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கிரைக் பிராத்வெயிட் 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களை எடுத்து இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 73.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை நெருங்கி இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 33 ரன்கள் பின்தங்கி இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிக அளவில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது நாளின் முடிவை நெருங்கிய போது ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் துவங்கியது. முதல் ஓவரிலேயே கேம்ரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்காமல் ஜேடன் சேல்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் மீண்டும் ஜேடன் சேல்ஸ் பந்துவீச்சில் உஸ்மான் கவாஜா இரண்டு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதை அடுத்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி குறைந்தபட்சம் 250 ரன்கள் எடுத்தால் தான் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயம் செய்ய முடியும்.
ஆஸ்திரேலியா அணி கடந்த போட்டியிலும் இதே போன்ற சூழ்நிலையில் இருந்து பின்னர் வெற்றி பெற்றது. எனவே இந்த முறையும் அதுபோல இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் சேர்த்து வெற்றி பெறுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.