கொல்கத்தா: டி20 மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீராங்கனைகள்.
கடந்த 3 தொடர்களாக தொடர்ந்து வென்று வந்த ஆஸ்திரேலியா அணியின் சகாப்தம் இந்தத் தொடரோடு முடிவுக்கு வந்தது. புதிய சாம்பியனாக மேற்கு இந்தியத் தீவுகள் உருவெடுத்துள்ளது.
இன்று கொல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்தால் தொடர்ச்சியாக 4வது பட்டத்தைப் பெற்றிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை மேற்கு இந்தியத் தீவு வீராங்கனைகள் தடுத்து விட்டனர்.
முன்னதாக ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் மெக் லேனிங் அபாரமாக ஆடி 52 ரன்களைக் குவித்தார். எலிஸ் விலானி தன் பங்குக்கு 52 ரன்கள் விளாசினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

அதன் பின்னர் 149 என்றகள் என்ற இலக்கைத் துரத்தத் தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு வீராங்கனைகள் ஹெய்லி மாத்யூஸ், ஸ்டெபானி டெய்லர் ஆகியோர் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சை நொறுக்கி ரன்களைக் குவித்தனர். 34 பந்துகளில் 50 ரன்களை விளாசினார் ஹெய்லி.
இருவரும் இணைந்து 120 ரன்களைக் குவித்த நிலையில் மாத்யூஸ், அலெக்ஸ் பிளாக்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் குவித்த ரன்கள் 66 ஆகும். டெய்லர் 59 ரன்கள் குவித்தார். கடைசி 2 ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் டியான்ட்ரா டாட்டின் அட்டகாசமான இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். பிரிட்னி கூப்பர் அணியின் வெற்றி ரன்னை அடித்துக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்த முறை அது முதல் முறையாக வென்று அசத்தியுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளின் வருடம்
இந்த வருடம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கான வருடம் என்று ஏற்கனவே ஆண்கள் அணி கேப்டன் சமி கூறி வருகிறார். ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி டாக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பட்டத்தைத் தட்டிச் சென்றது. தற்போது மகளிர் டி20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் சாம்பியன் ஆகியுள்ளது.
இன்று இரவு நடைபெறும் ஆடவர் இறுதிப் போட்டியிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றால் அது பெரும் வரலாறாக மாறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நாட்டின் இளையோர், மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் 3 உலகக் கோப்பைகளை ஒரே வருடத்தில் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.