சென்னை: பேஸ்புக், வாட்ஸாப், டிவிட்டரில் நமது ரசிகர்களின் ஒரே பெரும் கவலை.. இருந்த எல்லா பச்சை சட்டையையும் அடிச்சுத் துவைச்சு கிழிச்சாச்சு.. இனி இந்தியா என்ன செய்யப் போகிறதோ என்பதுதான் அந்தக் கவலை.!
அது என்னவோ தெரியவி்ல்லை, என்ன மாயமோ தெரியவில்லை.. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பச்சைக் கலர் நமது ரசிகர்களின் மனதில் அப்படி பச்சக் என ஒட்டிக் கொண்டு விட்டது.

இந்தியாவின் முதல் போட்டி பாகிஸ்தானுடன். நல்ல தோல்வியைக் கொடுத்தோம் அவர்களுக்கு. அடுத்து வந்தது தென் ஆப்பிரிக்கா. எதிர்பாராத வகையில் அந்த அணிக்கும் நெத்தியடி வைத்து அனுப்பினோம். அடுத்தடுத்து பச்சை சீருடை அணிந்த இரு அணிகளை வீழ்த்தியதால் பச்சைக் கலரைப் பார்த்தால் அடிப்பாங்கடா என்று கூறும் அளவுக்கு இந்திய அணியை உயர்த்தியும், பச்சை சீருடை போட்ட பிற அணிகளைக் கிண்டலடித்தும் சமூக வலைதளங்களில் விளையாட ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
இப்போது எல்லா பச்சை அணியையும் வீழ்த்தியாகி விட்டது. அடுத்து நாளை நாம் மோதப் போகும் ஆஸ்திரேலிய அணியின் சீருடை மங்களகரமான மஞ்சள் நிறமாகும். ஒரு வேளை நாளை நாம் வென்று விட்டால் அடுத்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ள நியூசிலாந்து அணியின் நிறமோ, துக்ககரமான கருப்பு நிறமாகும்.
இப்படி இருக்கிற பச்சை சட்டை எல்லாத்தையும் காலி செய்து விட்டதே இந்தியா.. நாளையும், அடுத்து இறுதிப் போட்டியிலும் என்ன செய்யப் போகிறதோ என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.
பயப்படாதீங்கப்பா.. ஆஸ்திரேலியாவின் சீருடையில் பச்சையும் ஒட்டியுள்ளது.. பார்த்துக் கொள்ளலாம்!