2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்தது. லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கை கோலி சீண்டியதால், அந்த விவகாரம் வெடித்தது. அது இந்திய கிரிக்கெட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது கவுதம் கம்பீர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். அந்த அணியில் இடம் பெற்று இருந்த அமித் மிஸ்ரா அப்போது என்ன நடந்தது என்பதை விவரித்தார்.
விராட் கோலி எல்லை மீறி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்களை சீண்டிக்கொண்டே இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் கவுதம் கம்பீர் இத்துடன் விட்டு விடுங்கள் என எச்சரித்ததாகவும், அதன் பின்பும் விராட் கோலி நவீன் உல் ஹக்கை திட்டியதாகவும், அதன் பின்பே கம்பீர் பொங்கி எழுந்ததாகவும் அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். அன்று என்ன நடந்தது?

அமித் மிஸ்ரா கூறியது இதுதான் - "இந்த மோதல் அனைத்தும் பெங்களூருவில் தான் தொடங்கியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பெங்களூருக்கு எதிராக வெற்றி பெற்றது. அப்போது கவுதம் கம்பீர், அவரது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு இருந்த பெங்களூரு ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். எனவே, கவுதம் கம்பீர் அவர்களை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார். அதை விராட் கோலி விரும்பவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் அந்த விவகாரம் அந்த போட்டியுடன் முடிந்தது என்று நினைத்தோம். ஆனால், கோலி அப்படி நினைக்கவில்லை. அடுத்து லக்னோவில் நடந்த பெங்களூரு - லக்னோ அணிகளின் போட்டியின் போது, கோலி எங்கள் வீரர்களை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்"
"கைல் மயர்ஸ்-க்கும், விராட் கோலிக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இதுவரை இருந்ததில்லை. ஆனால், அவரையும் திட்டினார். பின்னர், நவீன் உல் ஹக் பந்து வீசினார். அவரையும் விராட் கோலி திட்டினார். அப்போது நிறைய விஷயங்களை விராட் கோலி தவிர்த்து இருக்க முடியும். ஆனால், அவர் வேண்டுமென்றே அப்படி செய்தார். நானும் நவீன் உல் ஹக்கும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம். அப்போது நான் விராட் கோலியிடம், "நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய். நவீன் ஒரு இளம் வீரர். உன் அளவுக்கு மிகப்பெரிய வீரர் இல்லை. என்ன நடந்ததோ அது நடந்து முடிந்து விட்டது. இதை இப்படியே விட்டு விடு" என்று கூறினேன். அதற்கு விராட் கோலி, "இதை நீங்கள் நவீனுக்கு புரிய வையுங்கள்" என்று சொன்னார்."
"ஆனால், உண்மையான பிரச்சனை போட்டி முடிந்தவுடன் தான் தொடங்கியது. போட்டி முடிந்து நாங்கள் கைகுலுக்கி கொண்டிருந்தபோது, விராட் கோலி நவீன் உல் ஹக்கை மீண்டும் திட்டினார். அப்போதுதான் கவுதம் கம்பீர் அந்த விவகாரத்தில் தலையிட்டார். "ஏன் நீ இதை மறுபடி ஆரம்பிகிறாய்? போட்டி முடிந்து விட்டது. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்" என்று கூறினார். பின்னர், நான் சென்று கவுதம் கம்பீரை விலக்கி விட்டேன். பின்னர், மீண்டும் நவீன் உல் ஹக் வீரர்கள் அறைக்கு வந்து விராட் கோலி தன்னை மீண்டும் திட்டியதாக கூறினார்." (அதன் பின்னர்தான் கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்)
"இப்போதும் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனிக்கு மரியாதை கொடுப்பது ஏன்? ஏனெனில், அவர்கள் இளம் வீரர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். அவர்களை அன்புடன் நடத்துகிறார்கள். நீங்கள் (கோலி) ஆக்ரோஷமாக இருக்கலாம். ஆனால், இப்படி மோசமாக நடந்து கொள்ளக் கூடாது." இவ்வாறு அமித் மிஸ்ரா கூறினார்.