Ms Dhoni: நடுவர்களிடம் தல தோனி டென்ஷன்… நோபால் மட்டும் தான் காரணமா.. நடந்தது என்ன?
ஜெய்ப்பூர்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயோன ஒரேயொரு பால்.. இப்படி அகில உலக பேமசாக மாறியிருக்கும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். என்ன தான் நடந்தது அந்த கடைசி ஓவரில்?
12வது ஐபிஎல் சீசனின் 25வது லீக் ஆட்டம் நேற்று ஜெய்பூரில் நடந்தது. முதலில் பேட் செய்த ராஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்கள் 18. களத்தில் தோனி, ஜடேஜா இருந்ததால் வெற்றி எளிது என்றுதான் கிரிக்கெட் உலகமே அனிச்சையாக முடிவு செய்தது. ஆனால்... அந்த 20வது ஓவர் யாரும் மறக்க முடியாத ஓவராக மாறிவிட்டது.

ஜடேஜா சிக்சர்
20வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை ஜடேஜா ஆப்சைடில் சிக்சருக்கு தூக்கி அடிக்கிறார். மைதானமே அதிருகிறது. சென்னை அணியின் முகாமே குதூகலிக்கிறது.

ப்ரீஹிட்டில் 2 ரன்கள்
2-வது பந்து நோபால்... 6 அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த பந்தில் ஜடேஜா எடுத்ததோ ஒரேயொரு ஒரு ரன். ப்ரீஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் சேர்த்தார்.

ஆட்டமிழந்த தோனி
3வது பந்து யார்க்கர். அதில் தோனி க்ளீன் போல்டாகி 58 ரன்களில் ஆட்டம் இழந்தார். அரங்கமே அதிர்ச்சியில் வாய்பிளந்தது. சென்னை ரசிகர்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்தனர். சிலர் அழ தொடங்கிவிட்டனர். மைதானம் முழுவதும் விதவிதமான ரியாக்ஷன்கள்.

நோபால் இல்லை
அடுத்து களமிறங்கிய சான்ட்னர் 4வது பந்தை சந்தித்தார். அந்த பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றது. அதற்கு லெக் அம்பயர் , நோபால் அளித்தார். ஆனால், ஸ்ரெய்ட் அம்பயரோ அந்த பந்து நோபால் கிடையாது என்று அறிவிப்பை ரத்து செய்தார்.

மாறுபட்ட தீர்ப்பு
ஒரு பந்து... 2 நடுவர்கள் மாறுபட்ட தீர்ப்பு. ஒரே குழப்பம்... என்ற நிலையில், இறுதியில் நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதில் 2 ரன்கள் சான்ட்னர் எடுத்தார்.

தோனி கோபம்
தோள்பட்டைக்கு மேலே வீசப்பட்ட பந்துக்கு நோபால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி கோபம் கொண்டார். நேராக மைதானத்துக்குள் வந்தார். நோபாலை ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் கடுமையாக வாதிட்டார்.

காரசார வாக்குவாதம்
அவருடன் பென் ஸ்டோக்ஸும் பேச, அந்த இடத்தில் காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்தது. தோனியா இப்படி என்று கிரிக்கெட் உலகமே... மய்யமாக அதிர... நடுவர்கள் நோ பால் தர மறுத்துவிட்டதால், தோனி கோபத்துடன் வெளியேறினார்.

ஏன் இப்படி?
கிரிக்கெட் உலகின் மிக ஒழுக்கமான கேப்டன், ஜென்டில்மேன் வீரர், ஸ்பிரிட் ஆப் தி கேம் எனும் வார்த்தைக்கு உதாரணமானவர் தோனி. இதற்கு முன் நடந்த போட்டிகளில் தோனி வாதிட்டது இல்லை. முதல் முறையாக தோனி ஆட்டமிழந்த பின், களத்துக்குள் வந்து நடுவர்களிடம் வாதிட்டது விவாத பொருளாகி இருக்கிறது.

மறக்க முடியுமா?
அவர் இப்படி நடந்து கொண்டிருந்தது ஏற்க முடியாது என்று கூறப்பட்டாலும்... அந்த தருணத்தில் யாராக இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பார்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆக மொத்தத்தில் கிரிக்கெட் உலகம் மறக்கமுடியாத போட்டிதான் இது.


Click it and Unblock the Notifications