லண்டன்: கிரிக்கெட் ரசிகர்களிடையே "ஸ்பிரிட் ஆப் தி கேம்" குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் முக்கியமான நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி, பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்த முறையே இந்த விவாதத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆட்டம் முடிவடைந்த பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், இதுபோன்ற வெற்றி எங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால், வேண்டாம் என்றே கூறுவேன் என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார். அதேபோல் இவருக்கு சாதகமாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட், ஆஸ்திரேலிய வீரர்கள் மனிதர்களாக இருந்தால், பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தியதற்காக பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் இங்கிலாந்து பிரதமர் தொடங்கி பத்திரிகைகள் அனைத்து ஸ்பிரிட் ஆப் தி கேம் என்ற ஒற்றை வார்த்தையை பிடித்து பேசி வருகிறார்கள். ஆனால் விதிகளின்படியே பார்த்தோம் என்றால், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பிங் செய்ததில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பேர்ஸ்டோவ் ஏற்கனவே அதுபோல் முயற்சித்துள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ன் ஸ்பிரிட் ஆப் தி கேம் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எங்கே போனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். முக்கியமான நேரத்தில் ஃபீல்டர் த்ரோ செய்த பந்து, பென் ஸ்டோக்ஸ் பேட்டில் அடித்து பவுண்டரி எல்லைக்கு செல்லும். அதனை கைகளை தூக்கி ஏற்றிக் கொண்டவர் பென் ஸ்டோக்ஸ் என்றும், அப்போதெல்லாம் ஸ்பிரிட் ஆப் தி கேம் பாதிக்கப்படவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்போதும் இதேபோல் இப்படியான வெற்றி எங்களுக்கு தேவையில்லை என்று ஏன் பென் ஸ்டோக்ஸ் கூறவில்லை? உலகக்கோப்பை சூப்பர் ஓவர் வரை சென்று, அந்த சூப்பர் ஓவரிலும் டிராவில் முடிவடைந்தது. இதனால் பவுண்டரி எண்ணிக்கையில் பெற்ற வெற்றியை, நியூசிலாந்துடன் பங்கிட்டுக் கொள்ளாதது ஏன் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இருநாட்டு பத்திரிகைகளும் ஆஷஸ் தொடரை வைத்து மோதுவது ரசிகர்களிடையே அடுத்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.