மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி வீரர் புஜாரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அண்மையில் அறிவித்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரின் தூணாக இருந்த புஜாராவின் ஓய்வு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெற்ற வீரர்களுக்கு அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், புஜாரா மிக உயர்ந்த ஓய்வூதியப் பிரிவில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம், அவருக்கு மாதந்தோறும் 70,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இதுவே அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆடிய வீரர்களுக்கு குறைவான தொகைதான்.

2022 ஆம் ஆண்டில், முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தலைமையிலான நிர்வாகம், முன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கான ஓய்வூதியத் தொகையை கணிசமாக உயர்த்தியது. இதற்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான உயர்ந்தபட்ச ஓய்வூதியம் 50,000 ரூபாயாக இருந்தது, அது 70,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான புஜாரா, ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் அணியின் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அந்த இடத்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்துக்கொண்டார். அவர் மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 43.60 என்ற சராசரியுடன் 7,195 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். குறிப்பாக, வெளிநாட்டு மண்ணில், ஆஸ்திரேலியாவில் இந்தியா பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றிகளில் புஜாராவின் பங்கு அளப்பரியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த புஜாராவால், ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அவர் 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 51 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகத் தங்களது கடின உழைப்பை வழங்கிய வீரர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம் என பிசிசிஐ கருதுகிறது. அந்த வகையில், புஜாரா போன்ற மூத்த வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த ஓய்வூதியம், அவர்களின் பங்களிப்புக்கு அளிக்கப்படும் ஓர் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், அதிக ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடிய இந்திய வீரர்களுக்கு இது மிகவும் சிறிய தொகை தான். புஜாரா தற்போது ஓய்வு பெற்று விட்ட நிலையில் முழு நேரமாக வர்ணனை செய்ய இருக்கிறார். அதன் மூலம் அவர் ஓராண்டுக்கு சில கோடிகளை வருமானமாக பெறுவார்.