துபாய்: டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களில் கிரிக்கெட் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நான்காவதாக ஒரு புதிய, புரட்சிகரமான வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "டெஸ்ட் ட்வென்டி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வடிவம், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆழமான வியூகங்களையும் டி20 கிரிக்கெட்டின் அசுரத்தனமான வேகத்தையும் ஒரே நாளில் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
விளையாட்டு சார்ந்த தொழில்களை செய்து வரும் கௌரவ் பஹிர்வானி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த புதிய வடிவத்திற்கு, ஏபி டி வில்லியர்ஸ், சர் கிளைவ் லாயிட், மேத்யூ ஹெய்டன் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ஆலோசகர்களாக இருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் ட்வென்டி, டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டின் ஒரு கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் ட்வென்டி போட்டி, மொத்தம் 80 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். டெஸ்ட் போட்டியைப் போலவே, ஒவ்வொரு அணிக்கும் தலா இரண்டு இன்னிங்ஸ்கள் உண்டு.

ஒவ்வொரு இன்னிங்ஸும், டி20 போட்டியைப் போல 20 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு முழு போட்டியும், ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும். டெஸ்ட் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் வெற்றி, தோல்வி, 'டை' ஆகியவற்றுடன், 'டிரா' என்ற முடிவும் சாத்தியமாகும்.
டெஸ்ட் ட்வென்டியின் மற்றொரு முக்கிய அம்சம், அதன் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம். "AI டிஸ்கவரி இன்ஜின்" என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம், வீடியோ பகுப்பாய்வு (Video Analysis), மோஷன்-சென்சார் தொழில்நுட்பம், மற்றும் தரவு அறிவியல் (Data Science) ஆகியவற்றைப் பயன்படுத்தி, வீரர்களின் திறமைகளையும், ஆற்றலையும் எந்தவித பாகுபாடும் இன்றி மதிப்பிடும். இந்தத் தொழில்நுட்பம், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள், அகாடமிகள் மற்றும் சங்கங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், திறமையான இளம் வீரர்களை வெளிப்படையான முறையில் கண்டறிய முடியும்.
இந்த புதிய வடிவம் குறித்து ஜாம்பவான்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்:
ஏபி டி வில்லியர்ஸ்: "டெஸ்ட் ட்வென்டி என்பது ஒரு எதிர்கால நோக்கத்துடன் கூடிய புதுமை. இது விளையாட்டின் பாரம்பரியத்தை மரியாதை செய்வதோடு, எதிர்காலத்திற்கான சாத்தியங்களையும் அரவணைக்கிறது. இது இளம் வீரர்களுக்கு ஒரு புதிய கனவைத் தருகிறது."
ஹர்பஜன் சிங்: "கிரிக்கெட்டிற்கு ஒரு புதிய இதயத் துடிப்பு தேவைப்பட்டது; இன்றைய இளைஞர்களை விளையாட்டின் உண்மையான ஆன்மாவுடன் இணைக்கும் ஒன்றை டெஸ்ட் ட்வென்டி செய்கிறது."
டெஸ்ட் ட்வென்டியின் முதல் சீசன், வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இதில், உலகம் முழுவதிலுமிருந்து 6 அணிகள் பங்கேற்க உள்ளன. 3 இந்திய நகரங்களை மையமாகக் கொண்ட அணிகள் மற்றும் துபாய், லண்டன் மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட 3 அணிகள் இடம்பெறும்.
ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இருப்பார்கள். இதில் 8 இந்திய வீரர்கள் மற்றும் 8 சர்வதேச வீரர்கள் சமமாகப் பிரிக்கப்பட்டு, உள்ளூர் திறமையையும், உலக நட்சத்திரங்களின் பலத்தையும் இணைக்கும் வகையில் அணிகள் கட்டமைக்கப்படும். டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய ரசிகர்களைத் தக்கவைத்துக்கொண்டு, டி20 ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் இந்த 'டெஸ்ட் ட்வென்டி' வடிவம், வெற்றி பெறுமா?