மும்பை: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்ட பின், தனக்கான பயிற்சியாளர் குழுவை தேர்வு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் கொண்டு வரப்பட்டார்.
அதேபோல் துணைப் பயிற்சியாளராக ரியான் டென்டஸ்காட்டே நியமனம் செய்யப்பட்டார். ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடரும் சூழலில், பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் கொண்டு வரப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பயிற்சியாளர்களே இந்திய அணி பயிற்சியளித்து வந்த நிலையில், திடீரென வெளிநாட்டு பயிற்சியாளர் கொண்டு வரப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்திய மைதானங்கள் குறித்து முழுமையான தெளிவு மோர்னே மோர்கலிடம் இருக்குமா என்பது சந்தேகம் தான். இதனால் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முன் 3 சவால்கள் உள்ளன. அதில் முதல் சவால் என்னவென்றால், பவுலர்களுக்கு அழுத்தத்தை குறைப்பது தான். பவுலர்களின் மனதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை விதைப்பதோடு, லோ-ஸ்கோரையும் டிஃபெண்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கான வீரர்களை தயார் செய்து, இரண்டாம் கட்ட பவுலிங் அட்டாக்கையும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் 2வது சவால் என்னவென்றால், இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கில் பன்முகத்தன்மை கொண்டு வருவது தான். வெவ்வேறு ஸ்டைலில் வீசக் கூடிய பவுலர்களை பட்டைத் தீட்டுவதோடு, அவர்களுக்கு யார்க்கர், பவுன்சர், ஸ்லோ-பால்களை வீசும் திறமையை அதிகரிக்க வேண்டும்.
கடைசி சவால் என்னவென்றால், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்களின் வேலைப்பளுவை சமாளிப்பது தான். ஏனென்றால் 2 ஆண்டுகளில் வெறும் ஒரு மாதம் மட்டுமே இந்திய அணிக்கு ஓய்வு கிடைக்கும். இதனிடையே ஐபிஎல் உள்ளிட்ட லீக் போட்டிகளிலும் விளையாட வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் பிளாட் பிட்ச்கள், புல் தரை ஆகியவற்றில் பவுலிங் செய்வதற்கான பிரத்யேக திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.