கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் சமனில் முடிவடைந்தால், என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லாத அணியென்றால் தென்னாப்பிரிக்கா அணி தான். ஏனென்றால் மழை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட அணியென்றால் அது தென்னாப்பிரிக்கா அணி தான். 1992 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 12 நிமிடங்கள் பெய்த மழை காரணமாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று வித்தியாசமான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

அதேபோல் 1999 உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 2 பந்தில் இரு பவுண்டரிகள் விளாசியதால் ஆட்டம் சமன்நிலைக்கு வந்தது. ஆனால் அடுத்ததாக க்ளூசினர் ஓடி வந்ததை பார்க்காமல் டொனால்ட் க்ரீஸிலேயே நிற்க, எளிதாக ரன் அவுட் செய்யப்பட்டார். அரையிறுதி போட்டி சமனில் முடிவடைந்ததால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்றது.
இதுவரை பலமுறை தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு வந்தாலும், ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை. இதனால் உலகக்கோப்பை தொடரில் புதிய வரலாற்றை தென்னாப்பிரிக்கா படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இடையே மழை பெய்தால், தென்னாப்பிரிக்காவுக்கு எதாவது பாதிப்பு இருக்குமா அல்லது ஐசிசி விதிகள் சொல்வதை பார்க்கலாம்.
இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால் ஆட்டம் ரிசர்வ் டே-வுக்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகளை ஐசிசி ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. அதேபோல் ஆட்டம் சமனில் முடிவடைந்தாலும், சூப்பர் ஓவர் மூலமாக வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். ஒருவேளை சூப்பர் ஓவரிலும் சமன் ஏற்பட்டால், மற்றொரு சூப்பர் ஓவர் விளையாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு மழை காரணமாக எந்த பாதிப்பும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.