மும்பை : பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வழங்கப்பட்ட போது, அதனை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் மறுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் கட்டா குளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் செயல்பட்டு வருகிறார். இவரது பயிற்சியின் கீழ் கட்டா குளாடியேட்டர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது. சர்வதேச அணிகளுக்கு பயிற்சி கொடுத்த எந்த அனுபவமும் இல்லாமலேயே வாட்சன் சிறப்பாக வீரர்களை அணுகியதும், பயிற்சி கொடுத்ததும் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தரப்பில் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஷேன் வாட்சன் அணுகப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஷேன் வாட்சன் தரப்பில், ரூ.16.4 கோடி ஆண்டுக்கு ஊதியமாக கோரப்பட்டுள்ளது.
ஷேன் வாட்சன் கோரிய ஊதியம் இதுவரை பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் யாருக்கும் அளிக்கப்பட்டதில்லை. இருப்பினும் ஷேன் வாட்சனை ஒப்பந்தம் செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் மோசின் நாக்வி தீவிரமாக இருந்தார். இதையடுத்து பிசிபி சார்பாக ஷேன் வாட்சன் கேட்ட ஊதியத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் வியப்பை அளித்தன.
இதனிடையே ஷேன் வாட்சனின் ஊதிய விவகாரங்கள் சோசியல் மீடியா மற்றும் செய்திகளில் வெளியாகின. இதனால் பயிற்சியாளருக்கு இவ்வளவு ஊதியம் அளிக்க வேண்டுமா என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்தன. இது ஷேன் வாட்சனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஷேன் வாட்சன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிசிபி நிர்வாகத்திற்கு ஷேன் வாட்சன் தரப்பில், ஐபிஎல் வர்ணனை ஒப்பந்தங்கள் மற்றும் எம்எல்சி லீக் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பயிற்சியாளராக செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் ஷமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.