மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்த நிலையில் செப்.5ஆம் தேதி 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அஸ்வின், சாஹல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விடுபட்டது பேசுபொருளாகியது. அவர்களுக்கு பதிலாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அக்சர் படேலின் பேட்டிங் திறமை காரணமாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் மூவருமே இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களாக இருந்ததும் விமர்சனத்திற்குள்ளாகியது. அதேபோல் ஆசியக் கோப்பை தொடரில் இடதுகை பேட்ஸ்மேனான ஷகிப் அல் ஹசன் வெளுத்து கட்டினார். இவர்கள் மூவருக்குமே இடதுகை பேட்ஸ்மேன்கள் வீழ்த்துவது கடினமாக அமைந்தது.
இந்த நிலையில் அக்சர் படேல் காயம் காரணமாக விலக, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அக்சர் படேலுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலமாகவே இந்திய அணி நிர்வாகம் ஆஃப் ஸ்பின்னருக்கான தேடலில் இருப்பது தெரிய வந்தது. அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜாவை மட்டும் வைத்துக் கொண்டு அஸ்வின், சுந்தர் இருவரையும் இந்திய அணி நிர்வாகம் சேர்த்தது.
அதன் பலனாக இரு போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் இந்தூர் மைதானத்தில் அஸ்வினின் பந்துவீச்சுக்கு வார்னர் திணறியது இந்திய அணி வீரர்களுக்கே வியப்பை கொடுத்திருக்கும். அதேபோல் அஸ்வினின் பேட்டிங் திறமை மீது சந்தேகப்பட்ட இந்திய அணி நிர்வாகத்திற்கு, நள்ளிரவிலும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு ஆச்சரியப்படுத்தினார்.
ஆனால் இன்னொரு பக்கம் அக்சர் படேலின் பந்துவீச்சு தாக்கமின்றி இருந்தது. இதனால் அக்சர் படேல் இடத்தில் அஸ்வினை கொண்டு வருவதற்கான முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்துள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே வீரராகவும் அஸ்வின் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.