சென்னை: இந்திய கிரிக்கெட் ஹோம் சீசனில் விளையாடப் போகும் போட்டிகளில் ஒன்றில் கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அதன்பின் ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதையடுத்து இந்திய அணி 2024ஆம் ஆண்டு மார்ச் வரை தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில் செப்.22 முதல் செப்.27 வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், நவ.23 முதல் டிச.3 வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. பின் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 2வது வாரத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் ஜனவரி 20 முதல் மார்ச் 7 வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
2023-24ஆம் ஆண்டுக்கான ஹோம் சீசனில் 8 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த 16 போட்டிகளும் மொஹாலி, இந்தோர், ராஜ்கோட், வைஷாக், திருவனந்தபுரம், கவுகாத்தி, நாக்பூர், ஹைதராபாத், மொஹாலி, பெங்களூரு, இந்தோர், ஐதராபாத், வைஷாக், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா உள்ளிட்ட மைதானங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஹோம் சீசனில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட மைதானங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் ஏராளமான போட்டிகள் இந்த பிரபலமான மைதானங்களில் நடத்தப்பட உள்ளதால், ஹோம் சீசனில் மற்ற மைதானங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உலகக்கோப்பைத் தொடரின் போது சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.