2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்
இங்கிலாந்தில் நடைபெற்றது 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டிக்கு முன் இந்தியா தான் வெல்லும் என அனைவரும் கருதினர்.
இந்தியா மீது எதிர்பார்ப்பு
இந்திய அணி அதற்கு முன்பு வரை அனைத்து ஐசிசி தொடர்களின், அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. மேலும், அதே சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி இருந்தது இந்திய அணி.
டாஸ் முடிவு
அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அது தவறான முடிவாக அமைந்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.
பும்ரா வீசிய நோ பால்
துவக்க வீரர்கள் அசார் அலி - பாக்கர் ஜமான் 128 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். பாக்கர் ஜமான் சதம், ஹபீஸ் அரைசதம் அடித்தனர். அந்தப் போட்டியில் பாக்கர் ஜமான் துவக்கத்தில் கொடுத்த கேட்ச் ஒன்றை தோனி எளிதாக பிடித்தார். ஆனால், அது நோ பாலாக அமைந்தது. அது பும்ரா வீசிய பந்து.
பாக்கர் ஜமான் சதம்
அதன் பின்னர் தான் பாக்கர் ஜமான் சதம் அடித்தார். அதனால் தான் பாகிஸ்தான் அணி 338 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி பற்றி சமீபத்தில் பேசினார் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார்.
எல்லாம் மாறத் துவங்கியது
"2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பும்ராவின் நோ பாலுக்கு பின்னர் எல்லாம் மாறத் துவங்கியது. அதற்காக அது ஒரு தலை பட்சமான தோல்வி என்றோ, அல்லது நாங்கள் போராடவில்லை என்றோ அர்த்தம் இல்லை. நாங்கள் எப்போதுமே துரதிஷ்டவசமான சம்பவத்தால் தான் தோல்வி அடைந்துள்ளோம்" என்றார் புவனேஸ்வர்.
அறுதியிட்டு கூற முடியாது
"2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி தோல்வி ஒரு தலை பட்சமானது என்றலும், அதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. கடைசியாக நாங்கள் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வென்றோம். அதன் பின் 3 - 4 ஐசிசி தொடர்கள் தான் நடந்தது. அதில் 2 - 3 முறை நாங்கள் அரை இறுதி அல்லது இறுதி வரை முன்னேறினோம்." என்றார் புவனேஸ்வர்.