கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 மாற்றங்கள் செய்யப்பட்ட போதும், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்காதது ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக திலக் வர்மா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

செப்.2ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்கள் சேர்த்தார். இதன்பின் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பவுன்சர் பந்துகளுக்கு பயிற்சி செய்துகொண்டிருந்த போது, திடீரென முதுகு பிடிப்பு ஏற்பட்டது. இதனால் கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக வந்த பாகிஸ்தானுக்கு எதிராக கேஎல் ராகுல் சதம் விளாசினார். தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பயிற்சிக்கு கூட வராமல் ஹோட்டல் அறையிலேயே தங்கினார். இதன்பின் நேற்று நடைபெற்ற வலை பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயர் கலந்துகொண்டார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது.

ஏனென்றால் கொழும்பு ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படுவார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்னும் காயம் முழுமையாக குணமடையவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த சூழலில் இன்றைய போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கவில்லை. ஒருவேளை காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாத பட்சத்தில், உலகக்கோப்பை அணியில் மாற்றம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்படும்.