லண்டன்: ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விமர்சனங்கள் சரி என்று ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இதனால் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 450 ரன்கள் வரை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இதனால் இங்கிலாந்து அணியின் பேஸ் திட்டத்தை ஆஸி. அணி எளிதாக சமாளித்துவிட்டதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியின் போதே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பென் ஸ்டோக்ஸ் அமைத்த ஃபீல்ட் செட் அப்பை கடுமையாக விமர்சித்தார். ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்துவதற்காக அல்லாமல், பொழுதுபோக்கிற்காக ரசிகர்கள் தொலைக்காட்சி பக்கம் திருப்பவே ஸ்டோக்ஸ் ஃபீல்டிங் அமைப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் புதிதாக எந்த முயற்சியையும் செய்து பார்க்கவில்லை. டெஸ்ட் போட்டிக்கான மரபு சார்ந்த ஃபீல் செட் அப்பையே அமைத்தார். அதேபோல் டிராவிஸ் ஹெட்டிற்கு மட்டும் ஷார்ட் பால் திட்டத்திற்கான ஃபீல்டிங்கை அமைத்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ்-ன் பவுலிங் மாற்றங்கள் ஆஸி. அணிக்கு எவ்வித தொல்லையையும் கொடுக்கவில்லை. இதனால் பேஸ் பால் திட்டம் மீது கடுமையான விமர்சனங்களை அமைத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டம் பேட்டிங்கிற்கு மட்டுமானதாக அமைந்துள்ளது. பிளாட் பிட்ச்களில் இங்கிலாந்து அணி விளையாடுவதால் ஆண்டர்சன், பிராட், ராபின்சன் என்று யார் பந்துவீசினாலும் எதிரணிகள் ரன்கள் சேர்க்கவே செய்யும். ஸ்டீவ் ஸ்மித் போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேனை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிளாட் பிட்ச் அமைத்து விக்கெட் வீழ்த்துவதெல்லாம் சாதாரணமாதல்ல என்பதை இங்கிலாந்து அணி புரிந்து கொண்டிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஆஸி. அணியில் கட்டாந்தரையும் ஸ்பின் செய்யும் நேதன் லயன், பிளாட் பிட்ச்களிலும் அசாத்தியங்களை நிகழ்த்தும் பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டம் ஆஸி. அணிக்கு லாபமானதாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதனால் இங்கிலாந்து அணியின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.