டெல்லி : ஐசிசி உலக கோப்பையில் இலங்கையும் வங்கதேசம் மோதிய ஆட்டத்தில் தற்போது கிரிக்கெட்டில் இருக்கும் ஒரு புதிய விதி குறித்து ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது புதிய பேட்ஸ்மேன் களத்திற்கு வர தாமதமானதால் டைம் அவுட் முறைப்படி வங்கதேச வீரர்கள் அவுட் கேட்டனர்.
அதற்கு அவுட் வழங்கியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். கிரிக்கெட்டில் உள்ள அனைத்து விதிகளையும் நாம் கரைத்து குடித்து இருப்போம் என நினைத்தோம்.

ஆனால் பெரிய அளவில் யாருமே கேள்வி படாத வகையில் ஒரு விதி இருக்கிறது என்றால் அது டைம் அவுட் தான். அதாவது ஒரு வீரர் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த பேட்ஸ்மேன் இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்குள் வர வேண்டும். அதிகபட்சம் மூன்றாவது நிமிடத்திற்குள் களத்துக்கு வந்து பேட்டிங் செய்திருக்க வேண்டும். அப்படி பேட்ஸ்மேன் களத்துக்கு வர தாமதமானால் எதிரணி கேப்டன் நடுவரிடம் டைம் அவுட் முறைப்படி அப்பீல் கேட்கலாம்.
இதற்கு நடுவர் விதி மீறப்பட்டதை கண்டுபிடித்தால் அந்த பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கலாம். இதற்கு முன்பு இதுவரை எந்த பேட்ஸ்மேன்கள் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை ஏஞ்சலோ மேத்யூஸ் தான் முதல் முறை. ஆனால் மற்ற உள்ளூர் போட்டிகளில் இதுவரை 6 பேட்ஸ்மேன்கள் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 1988 ஆம் ஆண்டு ஜார்டன் என்ற வீரர் களத்திற்கு வர தாமதமானால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது. இதேபோன்று 1997 ஆம் ஆண்டு திரிபுரா, ஒரிசா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஹேமுலால் யாதவ் என்ற பேட்ஸ்மேனுக்கு டைம் அவுட் முறைப்படி அவுட் வழங்கப்பட்டது. இதேபோன்று 2002 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பார்டர் மற்றும் பீரி ஸ்டேட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெஸ்பேட் ட்ரேக்ஸ் என்ற வீரருக்கு மைதானத்திற்கு வர தாமதமானதால் அவருக்கு அவுட் வழங்கப்பட்டது.
இதேபோன்று 2003 ஆம் ஆண்டு நாட்டிங்காம்சியர் மற்றும் துர்ஹாம் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் ஏஜே ஹாரிஸ் என்ற பேட்ஸ்மேனுக்கு டைம் அவுட் வழங்கப்பட்டது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு ரியான் ஆஸ்டின் என்ற வீரருக்கு உள்ளூர் போட்டி ஒன்றில் டைம் அவுட் வழங்கப்பட்டது.