மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்தது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்பின் 3 நாட்களுக்கு பின் இந்திய அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று முன்தினம் நாடு திரும்பினர்.
இதன்பின் டெல்லியில் பிரதமரை சந்தித்த இந்திய வீரர்கள், மாலையில் மும்பையில் நடந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த விழாவில் பிசிசிஐ சார்பாக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் பார்வையாளராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தாய் பூர்ணிமாவும் கலந்து கொண்டார்.

அதன்பின் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டு முதல்முறையாக மகன் ரோகித் சர்மாவை பார்த்த அவரின் தாய் பூர்ணிமா, முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன்பின் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ரோகித் சர்மாவுக்கு அவரது நண்பர்கள், இந்திய வீரர் திலக் வர்மா உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்பை அளித்தனர்.
இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடர் வெற்றிக்கு பின் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்த முடிவினை அமெரிக்காவிற்கு விமானம் ஏறுவதற்கு முன்பாகவே ரோகித் சர்மா எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக ரோகித் சர்மா அவரின் தாய் பூர்ணிமாவை சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மாவின் அம்மா பூர்ணிமா பேசுகையில், ஒருநாள் ரோகித் சர்மா எங்களை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது இந்த டி20 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறினான். அப்போது இந்த முறை வென்றுவிட முயற்சி செய் என்று மட்டும் தான் கூறினேன். மருத்துவரிடம் செல்வதற்காக நேரம் முடிவு செய்திருந்தேன். அதனை விட்டுவிட்டு கொண்டாட்டத்தை பார்க்க வந்துள்ளேன்.
இந்த கொண்டாட்டத்தை பார்த்தபின் என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை. மும்பையில் இதுபோன்ற சூழலை பார்த்ததே கிடையாது. ரோகித் சர்மாவிற்கு கிடைக்கும் அன்பிற்கு பின் அவரின் உழைப்பு இருக்கிறது. இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான தாய் நான்தான் என்று தெரிவித்துள்ளார்.