சென்னை: எனக்கு நினைவு தெரிந்தது முதல்... ஆஸ்திரேலியாவைப் பார்த்து நான் நிறையவே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எப்படி இவர்களால் மட்டும் இப்படி அத்தனை பேரையும் அடித்து நொறுக்க முடிகிறது. அது ஆஸ்திரேலியா மைதானமாக இருந்தாலும் சரி அல்லது அகமதாபாத்தாக இருந்தாலும் சரி, அனாயசமாக ஆடும் ஒரே அணி ஆஸ்திரேலியாதான்.. ஆனால் இன்று அந்த எண்ணத்தை மாற்றிப் போட்டிருக்கிறது டோணி அன் கோவின் அருமையான ஆட்டம்.
ஸ்டைல், அட்டாக், நிதானம், ஆவேசம், பதுங்கல், பாய்ச்சல் என எடுத்த எடுப்பிலிருந்தே விதம் விதமான கலவையுடன் ஃபென்டாஸ்ட்டிக்கான கிரிக்கெட்டை ஆடி வருகிறார்கள் இந்திய வீரர்கள்.

இத்தனை நாட்களாக இந்த பாணியை ஆஸ்திரேலியா மட்டுமே கடைப்பிடித்து வந்தது. ஆனால் இன்று ஆதே ஆஸ்திரேலியாவில்- அதுவும் இதே ஆஸ்திரேலியாவில் சமீபத்தில்தான் கேவலமான தோல்விகளைச் சந்தித்தது இந்தியா - இன்று இந்தியா காட்டி வரும் விஸ்வரூபம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
இது ஏதோ குருட்டாம்போக்கில் வந்த வெற்றியல்ல.. சொல்லிச் சொல்லி அடிக்கிறது இந்தியா.. டோணி தலைமையில் புது வீச்சில், புது வேகத்தில், புது வெறியுடன், புதுத் தென்றலாக, புயலின் வேகத்தில் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.
ஓட்டை பவுலிங்கை வைத்து உலகக் கோப்பையைத் தக்க வைக்கப் போகிறதா இந்தியா என்று உளறிய வாய்களுக்கு ஆசிட்டைத் தடவி விட்டு வருகிறார்கள் இந்திய பவுலர்கள்.
குறிப்பிட்ட ஆர்டருக்கு மேல் சரியாக பேட் செய்ய மாட்டார்கள் என்று கேலி பேசப்பட்ட பேட்டிங்கில், புது பரிமாணத்தைக் காட்டி நையப்புடைத்து வருகிறார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள்.
நேரா கொண்டு போய் கையில் வைத்தால் கூட இவர்களுக்குப் பிடிக்கத் தெரியாது என்று சொல்லியவர்கள் வெட்கி ஓடும்படி அட்டகாசமாக பீல்டிங்கிலும் கலக்கி வருகிறது இந்திய அணி.
ஆஸ்திரேலியா விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா.. ஏதாவது ஒன்று சோடை போனாலும் மற்றதை வைத்து சமாளித்து மீண்டு வந்து விடுவார்கள்.. அதுவும் அராத்தாக. அதேபோலத்தான் இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இந்திய பின்னி எடுத்து வருகிறது.
அது மட்டுமா.. ரோஹித் சரியாக விளையாடாவிட்டால் தவான் வெளுக்கிறார்.. இவர் சொதப்பினால் கோஹ்லி நொறுக்குகிறார்.. அவர்கள் சொதப்பினால் டோணி கை கொடுக்கிறார். அவரும் கைவிட்டால் சுரேஷ் ரெய்னா வெளுக்கிறார். திடீரென ஜடேஜாவும் தன் பங்குக்கு அழகாக முட்டுக் கொடுக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஹீரோவை வெளிப்படுத்தி வருகிறது இந்தியா. இது அப்படியே ஆஸ்திரேலிய பாணியாகும்.
பவுலிங்கைப் பாருங்கள்.. பிரமாதம்டா, பிரமாதம்டா என்று புல்லரித்து சிலாகிக்கும் வகையில் கலக்கி வருகிறார்கள் நமது பந்து வீச்சாளர்கள். வேகப் பந்து மட்டுமல்ல, ஸ்பின்னிலும் பின்னி எடுக்கிறது இந்திய அணி.
டோணியைப் பற்றி தனியாக பத்து வெப்சைட் ஆரம்பித்து அது நிறைய ஸ்டோரி போடலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் கலக்கி வருகிறார் டோணி. இருக்கிறத வச்சு கட்டு செட்டாக குடும்பம் நடத்து என்று சொல்வார்கள் பாருங்கள், கிராமத்தில். அதேபோல இருக்கிற வீரர்களை வைத்து அவர் அழகாக வெற்றிகளைப் பறிக்கும் விதம் இருக்கிறதே.. ஆ..கா..கா..!
நிஜமாவே இப்படி ஒரு அணியைத்தான் இந்தியா இத்தனை காலமாக தேடி வந்தது. என்னைக் கேட்டால் கடந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை விட இந்த அணிதான் பெஸ்ட்டஸ்ட் பெஸ்ட்...!