லக்னோ: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பட்டையை கிளப்பிய ரிங்கு சிங்கிற்கு ஏசியன் கேம்ஸ்-க்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் உற்சாகத்தில் உள்ள ரிங்கு சிங், தனது கிரிக்கெட் பயணம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை பேரின் கனவும் இந்திய அணியில் இடம்பிடித்து, அந்த ஜெர்சியை அணிவது தான். எதிர்காலத்தை பற்றிய பெரிதாக சிந்திக்கவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தை பற்றி யோசித்தால், அதன் அழுத்தமும் கூடவே சேர்ந்து வரும். இந்திய அணிக்கு நான் தேர்வாகியது, என்னை விடவும் என் குடும்பத்தினருக்கே அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்திய அணி ஜெர்சியில் என்னை பார்த்தால், குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் நடந்த போராட்டங்களை நேரில் கண்டு உதவி இருக்கிறார்கள். நான் வலிமையான மனநிலை கொண்ட மனிதர் தான். ஆனால் அதிக எமோஷனுடன் தான் இருப்பேன். நிச்சயம் இந்திய அணியின் ஜெர்சியை அணியும் போது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீரே வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
அதேபோல் ஐபிஎல் தொடர் மறக்க முடியாத அனுபவம் தான். ரிங்கு சிங்கை ஐபிஎல் தொடரின் ஐந்தரை வாரங்கள் மூலமாகவே ரசிகர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் எனது மனதில், அந்த ஐந்தரை வாரங்கள் பற்றிய எண்ணமே இல்லை. நான் மீண்டும் எனது தினசரி வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன். உடற்பயிற்சி, வலைப்பயிற்சி உள்ளிட்டவைக்கு திரும்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், உத்தரப் பிரதேச மாநில அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய இடங்களிலேயே விளையாடி வருகிறேன். எப்போதெல்லாம் டாப் ஆர்டர் சரிவை சந்திக்கிறதோ, அப்போது நான் சிறந்த இன்னிங்ஸை ஆட வேண்டிய அழுத்தத்தை அங்கேயே பழகிக் கொண்டேன். அந்த அனுபவம் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிய போது பெரியளவில் உதவியது என்று கூறியுள்ளார்.
மேலும் இளம் வீரர்களுக்கு உதவி வருவது பற்றிய கேள்விக்கு, இந்த விவகாரம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்ற கனவுடன் உள்ள இளைஞர்கள் யாரும் பொருளாதார பிரச்சனையுடன் இருக்க கூடாது. இந்த பிரச்சனையால் பல பெற்றோர், குழந்தைகளை கிரிக்கெட் கனவை காண்பதற்கே கஷ்டப்படுகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
அதேபோல் நான் வாழும் சமூகத்திற்கு திருப்பி கொடுப்பதை போன்ற உதவி தான் இது. என்னை போல் ஏராளமான வீரர்கள் என் பகுதியில் இருந்து வளர வேண்டும். இதற்காக பணம் செலவு செய்வது பற்றிய கவலையில்லை. எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். அதனால் நிறைய பணத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.