துபாய்: கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால், பெரும் ஏக்கத்துடன் காத்திருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு கிடைத்துள்ளது. ஆசியாவின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் 2025 ஆசியக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
ரசிகர்களின் வசதிக்காகப் போட்டி நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த புதிய ஆசிய கோப்பை அட்டவணை விவரம் இந்த செய்தியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தொடரில் உள்ள 19 போட்டிகளில் 18 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்குத் தொடங்கும். செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி மட்டும் மாலை 5:30 மணிக்குத் தொடங்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான வெப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களது வேலைகளை முடித்துவிட்டு, போட்டிகளைக் கண்டு ரசிப்பதற்காகவும் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும் வசதியாக இருக்கும்.
இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஓமன் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
குழு ஏ: இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன்
குழு பி: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் ஆட்டம், செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் உள்ள சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி குழும சேனல்கள் மற்றும் "சோனி லிவ்" (SonyLiv) ஓடிடி தளங்களில் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஆக, செப்டம்பர் மாதம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனல் பறக்கும் ஆட்டங்கள் காத்திருக்கின்றன என்பது உறுதி.