டெல்லி: இந்த ஐபிஎல் சீசனில் கிட்டத்தட்ட பெரும்பாலான அணிகளுக்கு புதிய கேப்டன்கள் கிடைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுடைய கேப்டன்சி திறமையை நிரூபித்து வருகின்றனர். அதில், கேப்டன் கூல் டோணியின் பாணியில், பதற்றப்படாமல் அமைதியாக செயல்பட்டு வருகிறார் கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக். கொஞ்சம் கொஞ்சமாக அவர் டோணியாகவே மாறி வருகிறார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலான அணிகளுக்கு புதிய கேப்டன்கள் கிடைத்துள்ளனர். கொல்கத்தாவுக்கு தமிழரான தினேஷ் கார்த்திக், பஞ்சாபுக்கு மற்றொரு தமிழரான அஸ்வின் கேப்டனாக உள்ளனர். கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ள கவுதம் கம்பீர் அதன் கேப்டனாக உள்ளார். ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், ராஜஸ்தானுக்கு அஜிங்யா ரஹானே கேப்டன்களாக உள்ளனர்.
முதல் முறையாக கேப்டனாகியுள்ள ரஹானே, தினேஷ், அஸ்வின், கேன் வில்லியம்சன் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த சீசனின் 15வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின. இதில் கொல்கத்தா அபாரமாக வென்றது.
இதுவரை கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்து, கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மைதானத்தில் பதற்றப்படாமல், வீரர்களை அரவணைத்து செல்வதில், சிஎஸ்கே கேப்டன் டோணியைப் போல கேப்டன் கூலாக செயல்பட்டு வருகிறார் தினேஷ்.
அதிரடி ஸ்டம்பிங்கில் டோணியை அடிச்சிக்க ஆளே இல்லை. நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவை அவுட்டாக்கிய விதத்திலும், டோணியின் ஸ்டைலை தினேஷ் கார்த்திக் பின்பற்றினார். பந்து ரஹானேவின் பேடில் பட்டு சற்று தள்ளி விழுந்தது. அப்போது வேகமாகச் சென்று பந்தை எடுத்து ஓடிய வேகத்திலேயே ஸ்டம்பை குறிவைத்து அடித்தார் தினேஷ் கார்த்திக். இதைப் பார்த்து ரஹானே அசத்து போய் நின்றுவிட்டார்.
சந்திரமுகி படத்தில் வருவதுபோல், தினேஷ் கார்த்திக் கொஞ்சம் கொஞ்சமாக டோணியாகவே மாறி வருகிறார்.