மும்பை: இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஸ்பெஷல் திறமை பற்றி தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டிவில்லியர்ஸ் வியந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஜாம்பவான் வீரர்கள் பலரும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் திறமையை பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் தொடரிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெய்ஸ்வால், அறிமுகப் போட்டியின் மூலம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனித்து தெரிகிறார். டாப் ஆர்டரில் பேட்ஸ்மேனாக அறிமுகமாகும் இளம் வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசுவது சாதாரணமானது கிடையாது. ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வாலை முதல்முறையாக பார்த்தபோதே, அவரிடம் ஏதோவொரு ஸ்பெஷாலிட்டி இருப்பதை அறிந்துகொண்டேன்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்யும் போது, பந்தை எதிர்கொள்ள எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்பதை பாருங்கள். அவருக்கான நேரத்தை உருவாக்கி கொள்கிறான். இடதுகை பேட்ஸ்மேன் என்பதோடு, நல்ல உயரத்தில் இருப்பதால், அவருக்கு வேகப்பந்துவீச்சு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல் இரு வகையான பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்ளும் போது, எப்படி விளையாடலாம் என்று முடிவெடுக்க சரியான நேரத்தை எடுத்துக் கொள்கிறார்.
மிகவும் திறமை வாய்ந்த இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரராக இருப்பார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் வியக்கத்தக்க வீரராக மாறி வருகிறார். ஒரு சீசனோ, இரு சீசனோ அல்ல, ஒவ்வொரு சீசனிலும் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். எனக்கு எதிராக பவுலிங் செய்யும் போது ஏராளமான முறை எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளார்.
இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால், நிச்சயம் அவரை GOAT என்று அழைக்கலாம் என்று கூறியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 486 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், இன்னும் 14 விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.