மும்பை: 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று மாலை வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்காக பிசிபி சார்பாக இரவு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடம் உள்ளது. ஆனால் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இருப்பினும் ஆசியக் கோப்பைக்கான அட்டவணை வெளியாகாததால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் பயணம் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் பிசிசிஐ சார்பில் முற்றிலும் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி கூட்டம் நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சாகா அஷ்ரப்புடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் சந்தித்தனர். அதன்பின், ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நேபாள் அணியுடன் மட்டுமே மோதவுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் - வங்கதேசம், வங்கதேசம் - இலங்கை மற்றும் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் டம்புலா மைதானத்திலேயே நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஒரு வழியாக ஆசியக் கோப்பை அட்டவணை இன்று இரவு 8 மணியளவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். லீக் போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். ஆகஸ்ட் 31ல் தொடங்கும் ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 17ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.