2026 மகளிர் ஐபிஎல் எப்போது தொடங்கும்? மெகா ஏலம் எப்போது? வெளியான முக்கிய தகவல்.. பிசிசிஐ முடிவு
மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 மகளிர் ஐபிஎல் (WPL) தொடரின் தேதிகள் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த பிரம்மாண்ட மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 7-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 3-ம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவடையும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
2026 மகளிர் ஐபிஎல் தொடர் நவி மும்பை மற்றும் பரோடா ஆகிய நகரங்களில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்திலும், இரண்டாவது பாதி ஆட்டங்கள் பரோடாவில் உள்ள கோடாம்பி மைதானத்திலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலமும், இடங்களும்
இந்தத் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவம்பர் 27-ம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதால், அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அதிகாரப்பூர்வமாக அணிகளுக்கு அறிவிக்கவில்லை என்றாலும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 27 அன்று நடைபெறும் ஏலத்தின் போது, அணிகளுக்குப் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
ஜனவரியில் WPL நடத்தப்படுவது ஏன்?
2026 மகளிர் ஐபிஎல் தொடருக்காக ஜனவரி மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
முந்தைய சீசன்கள்
இதுவரை மூன்று மகளிர் ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ளன.
- மகளிர் ஐபிஎல் 2025: நடப்புச் சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது.
- மகளிர் ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
- மகளிர் ஐபிஎல் 2023: முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. மூன்று முறையும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டன. இந்த நிலையில், மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீராங்கனைகள் எந்த அணிக்குச் செல்வார்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications