வைபவ் சூர்யவன்ஷி அடுத்து எப்போது இந்திய அணிக்காக விளையாடுவார்? இன்னும் எத்தனை மாதம் ஆகும்?
மும்பை: ஜிம்பாப்வே டி20 தொடரில் அதிரடி காட்டி தொடர்நாயகன் விருது வென்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மீண்டும் எப்போது இந்திய அணிக்காகக் களமிறங்குவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்று இருந்தார் வைபவ் சூர்யவன்ஷி.
ஆனால், அந்தத் தொடரில் ரன் குவிக்கத் தவறிய வைபவ் சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை ஆடினார். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 அதிரடி அரைசதங்களுடன் 151 ரன்கள் குவித்து, தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இவரது அபார ஆட்டத்தின் மூலம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது தலைமையில் முதல் டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்தார்.

இந்தத் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பதால், அவர் இத்தொடரில் விளையாட மாட்டார்.
இலங்கை தொடருக்குப் பிறகு இந்திய அணி தனது அடுத்த டி20 தொடரில் விளையாடுவதற்கு அக்டோபர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். இந்திய அணி தனது அடுத்த இருதரப்பு டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
அதற்கு முன்னதாக செப்டம்பர் கடைசி வாரத்தில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் டி20 கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி விளையாடுகிறது. அதற்கான அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டு தொடக்க வீரர்களுடன் மாற்று தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். அவருக்கு அந்த தொடரில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
அதன் பின்னர் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
எனவே, ரசிகர்கள் மீண்டும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைக் காண செப்டம்பர் இறுதி வரை காத்திருக்க வேண்டும். இதன் இடையே செப்டம்பர் மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடருக்கு முன்பாக இந்தியாவுடன் விளையாட ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் முயற்சித்து வருகின்றன. அதற்கான அறிவிப்பு வந்தால் அதிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications

