கோவை: டிஎன்பிஎல் தொடரில் கோவை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணி வீழ்த்துவதற்கு, 20 வயதேயான அஜிதேஷ் குருசாமி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். யார் இந்த அஜிதேஷ் குருசாமி என்று பார்க்கலாம்.
டிஎன்பிஎல் தொடரின் மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்றை நேற்றிரவு பதிவு செய்துள்ளது நெல்லை ராயல் கிங்ஸ் அணி. கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டால், ஐபிஎல் தொடரில் என்னவெல்லாம் ட்விஸ்ட் நடக்குமோ அதற்கு அதிகமாகவே ட்விஸ்ட்-க்கு மேல் ட்விஸ்ட் நடந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கோவை - நெல்லை அணிகள் வழங்கின. இறுதியாக நெல்லை அணி கடைசி 2 பந்தில் 7 ரன்கள் சேர்த்து அசாத்திய வெற்றியை பதிவு செய்தது.
நெல்லை அணியின் இந்த வெற்றிக்கு 20 வயதேயான அஜிதேஷ் குருசாமி முக்கிய காரணமாக அமைந்தார். 60 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்த அவர், 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசியுள்ளார். நடப்பு டிஎன்பிஎல் சீசனில் முதல் சதத்தையும் அஜிதேஷ் குருசாமி பதிவு செய்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 20 வயதேயான வீரரால் இமாலய சிக்சர்களை எப்படி விளாச முடிகிறது என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

சொந்த மாநிலம் தமிழ்நாடு என்றாலும், கர்நாடகா மாநிலத்தில் வளர்ந்தவர் அஜிதெஷ் குருசாமி. இவரின் தந்தை தீவிர கிரிக்கெட் ரசிகர். இதனால் 7 வயதிலேயே அஜிதேஷிற்கு தந்தை ஞான குருசாமி கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார். 7 வயதாக இருக்கும் போதே பேட் மற்றும் பந்துடனே தூங்கும் அளவிற்கு கிரிக்கெட் ஆசை வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியில் அஜிதேஷ் இணைய, பேட்டிங்குடன் சேர்த்து விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் தொடங்கியுள்ளார்.
சிறு வயது முதலே சாதாரணமாக அதிக சிக்சர் விளாசும் திறமை கொண்ட அஜிதேஷ் பெயர், பெங்களூரு முழுவதும் பரவியுள்ளது. இதனால் கர்நாடகா மாநில யு-14, யு-16 அணிகளில் அஜிதேஷ் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இருப்பினும் நாளடைவில் அஜிதேஷிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்க, ஒரு கட்டத்தில் சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளார். அப்போதுதான் கோவை ராமகிருஷ்ணா கல்லூரியின் பயிற்சியாளர் கண்களில் சிக்கியுள்ளார்.
உடனடியாக அவருக்கு விளையாட்டுப் பிரிவில் ஸ்காலர்ஷிப் உடன் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்க, கூட டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கும் விளையாட வாய்ப்பு வந்துள்ளது. உடனடியாக அஜிதேஷ் குடும்பத்தினர் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு மொத்தமாக மாறியுள்ளனர். மகனின் கிரிக்கெட்டுக்காக அனைத்து சிரமங்களையும் தந்தை குருசாமி மாற்றம் செய்துள்ளார். அதன்பின்னர் அஜிதேஷின் பயணம் எங்குமே நிற்கவில்லை.
கடந்த டிஎன்பிஎல் சீசனிலேயே மிரட்டலாக சில இன்னிங்ஸ்களை ஆடிய அஜிதேஷ் குருசாமி, எம்ஆர்எஃப் அகாடமியில் குளோப் டிராட்டர்ஸ் கிளப்பிற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சென்னை ஃபர்ஸ்ட் டிவிஷன் தொடரிலும் விளையாடி வருவதால், விரைவில் தமிழ்நாடு அணிக்கும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.