சென்னை: ராஜஸ்தான் அனிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக 20 வயதேயான இளம் வீரர் ஆகாஷ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். யார் இந்த ஆகாஷ் சிங் என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் நட்சத்திர ஸ்பின்னர் சான்ட்னர் மற்றும் ப்ரிடோரியஸ் ஆகியோர் நீக்கப்பட்டு தீக்சனா மற்றும் மொயின் அலி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் தீபக் சஹர் காயம் காரணமாக வெளியேறியதால், அவருக்கு பதில் இளம் வீரர் ஆகாஷ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகேனர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர். சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆகாஷ் சிங், 2012ஆம் ஆண்டு முதல் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக சொந்த ஊரில் இருந்து 12 வயதிலேயே பயிற்சிக்காக ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். இதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ச்சியாக 4 முறை தோல்வியடைந்துள்ளார்.
ஆனால் கிரிக்கெட் என்னும் தேர்வில் ஆகாஷ் சிங் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் நாகாலாந்து அணிக்காக விளையாடி வரும் இவர், 2020ஆம் ஆண்டு அண்டர் 19 உலக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றவர். தற்போது சிறப்பாக விளையாடி வரும் ரவி பிஷ்னாய், ஜெய்ஷ்வால் ஆகியோருடன் சரிக்கு சமமான விளையாடியவர். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஆகாஷ் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இதனிடையே கடந்த ஆண்டு சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிய முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக வெளியேறினார். இதனால் முகேஷ் சவுத்ரி மாற்று வீரராக இடதுகை வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே நிர்வாகம் தேடி வந்தது. அப்போது சென்னை அணி தேர்வுக் குழு முன் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் சிங், இன்ஸ்விங்கர் வீசுவதில் தோனியை அதிகளவில் ஈர்த்துள்ளார். அதன் காரணமாகவே ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு பதிலாக ஆகாஷ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.