சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்று வீரராக ஆயுஷ் மாத்ரே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 17 வயதான மும்பை வீரரான இவரை குறித்து பார்க்கலாம். ஆயுஷ் மாத்ரே 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
அவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தார். ரஞ்சி டிராபியில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற இராணி கோப்பை தொடரில் ஆயுஷ் மாத்ரே மும்பை அணியின் துவக்க வீரராக அறிமுகம் ஆனார். அவர் மும்பை அணிக்காக முதல் 9 முதல் தர போட்டிகளில் இதுவரை 504 ரன்கள் சேர்த்துள்ளார்.

இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார். இதை அவர் வெறும் ஒன்பது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் செய்துள்ளார். மேலும், லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அவர் 458 ரன்கள் குவித்துள்ளார், இரண்டு சதங்கள் அடித்துள்ளார். மேலும், ஆல்ரவுண்டராகவும் செயல்படும் இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
துவக்க வீரராகவும், பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயல்படுபவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆயுஷ் மாத்ரேயை தேர்வு செய்து இருக்கிறது. லிஸ்ட் ஏ போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அவரது பேட்டிங் சராசரி 65.42 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 135 ஆகவும் உள்ளது. உள்ளூர் ஒருநாள் போட்டிகளிலேயே அவர் இந்த அளவுக்கு அதிரடியாக ஆடும் நிலையில், டி20 போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தேர்வு செய்துள்ளது.
17 வயது வீரரை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதன் பின்னணியிலும் ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிறது. எப்படி ருதுராஜ் கெய்க்வாட்டை இளம் வயதிலேயே தேர்வு செய்து தற்போது அணியின் கேப்டனாக சிஎஸ்கே அணி மாற்றியுள்ளதோ, அதேபோல இவரையும் வரும் காலங்களில் அணியில் தக்க வைத்து வளர்க்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கான முன்னோட்டமாகவே 2025 ஐபிஎல் தொடரில் ஆயுஷ் மாத்ரே அழைக்கப்பட்டுள்ளார். எதிர்கால திட்டம் இல்லை எனில், சிஎஸ்கே அணி நிச்சயமாக அதிரடியாக விளையாடும் அதிக அனுபவம் உடைய வேறு வீரர்களை தேர்வு செய்திருக்கும்.
ஆனால், எதிர்காலத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்ய வேண்டும் என்பதாலேயே ஆயுஷ் மாத்ரேயை சிஎஸ்கே அணி குறிப்பிட்டு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ள போட்டியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.