சர்ச்சைகள்
2007ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை நடைபெற்றது. அதில் குரூப் சுற்றிலேயே இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சைகளும், குழப்பங்களும் நிலவியது. பயிற்சியாளர் கிரெக் சேப்பல் பதவி விலகினார்.
முதல் டி20 உலகக்கோப்பை
அதன் பின் சில மாதங்களில் முதல் டி20 உலகக்கோப்பை நடைபெற்றது. அந்த தொடரில் மூத்த வீரர்களான கங்குலி, டிராவிட், சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை. சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற அனுபவ வீரர்களுடன் அதிக இளம் வீரர்கள் கொண்ட அணி தோனி தலைமையில் களமிறங்கியது.
மேனேஜர்
அப்போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் யாரும் இல்லாத நிலையில் மேனேஜர் தான் அணியை நிர்வகித்தார். அப்போது மேனேஜராக நியமிக்கப்பட்டவர் லால்சந்த் ராஜ்புத். இந்திய அளவில் உள்ளூர் அணிகள், அண்டர் 19 அணிகளின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை மேனேஜராக நியமித்து இருந்தது பிசிசிஐ.
பயிற்சியாளர் சிக்கல்
கிரெக் சேப்பல் பயிற்சியாளராக இந்திய அணியை மோசமான நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார் என கடும் விமர்சனம் அப்போது இருந்த காரணத்தால் அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ எந்த முடிவும் எடுக்கவில்லை. மாறாக தற்காலிகமாக மேனேஜரை மட்டும் நியமிக்க முடிவு செய்தது.
சத்தமே இல்லாமல் பணியாற்றினார்
அப்போது பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத்தையும், பீல்டிங் பயிற்சியாளராக ராபின் சிங்கையும் நியமித்து சமாளித்த பிசிசிஐ, அனுபவ பயிற்சியாளரான லால்சந்த் ராஜ்புத்தை மேனேஜராக நியமித்தது. அவர் பயிற்சியாளருக்கு உரிய பணியையும் சத்தமே இல்லாமல் செய்தார்.
டி20 உலகக்கோப்பை வெற்றி
அவருடைய உத்வேகமான பேச்சுக்கள் இந்திய அணியை இறுதிப் போட்டியை வெல்ல வைத்தது. புதிய கேப்டன், டி20 எனும் புதிய போட்டி, முந்தைய பயிற்சியாளரால் கசப்பான அனுபவத்துடன் இருந்த இந்திய அணி. இப்படி பல சிக்கல்களை கையாள வேண்டிய நிலையில் தான் லாக்சாந்த் ராஜ்புத் இருந்தார்.
பிசிசிஐ வாய்ப்பு அளிக்கவில்லை
லால்சந்த் ராஜ்புத் 2007க்குப் பின் இந்திய அணியில் மேனேஜர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் அவர் பல முறை இந்திய அணிக்கு பயிற்சியாளராக முயற்சி செய்தார். ஆனால், பிசிசிஐ அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற அணிகள் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்து அவரை பயிற்சியாளராக நியமித்தன. அதில் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சியில் லால்சந்த் ராஜ்புத்தின் பங்கு அதிகம். அந்த அணி டெஸ்ட் அந்தஸ்து பெற அவரும் ஒரு முக்கிய காரணம்.