அபுதாபி: 19 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. 10 அணி நிர்வாகிகளும் இதற்கு தயாராகி வருகிறார்கள். மொத்தம் 369 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். எல்லா அணிகளும் தாங்கள் ஏலம் கூறும் வீரர்கள் தங்களுக்கே 'Sold' என்று சொல்லும் வரை கொஞ்சம் திக் திக் என்று தான் இருப்பார்கள். ரசிகர்களும் அப்படித்தான். இப்படி ஏலத்திலேயே எதிர்பார்ப்பை எகிற வைப்பவர் என்றால் அது ஏலம் விடுபவர் தான். அப்படி இந்த மினி ஏலத்தை ஏலம் விடுபவர் மல்லிகா சாகர். அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
மல்லிகா சாகர் தனது இளம் வயதில் ஒரு பெண் ஏலதாரரை கதையின் மையக் கதாபாத்திரமாக கொண்ட புத்தகத்தை படித்த போது ஏற்பட்ட ஈர்ப்பும் உத்வேகமும் மல்லிகா சாகரை இன்றைக்கு உலகமே உற்று நோக்கும் ஐ.பி.எல் ஏலத்தை நடத்தும் ஏலதாரராக மாற்றியுள்ளது. கல்லூரி காலத்தில் ஆர்ட் ஹிஸ்ட்ரியில் பட்டம் பெற்றாலும், ஏலதாரராக மாறும் தனது கனவை மல்லிகா துரத்திக் கொண்டே இருந்தார். தனது 26வது வயதிலேயே நியூயார்க்கில் உள்ள சர்வதேச ஏல நிறுவனமான Christie's-இல் முதல் இந்தியப் பெண் ஏலதாரராக உருவெடுத்தார்.

முதல் பெண் ஏலதாரர்: 2001இல் ஏலதாரராக தொடங்கிய இவரது வாழ்க்கை இன்றைக்கு உலகமே உற்று நோக்கும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளது. சர்வதேச அளவில் பல கலை நிபுணத்துவம் கொண்ட பொருட்களை, பழைய காலத்துப் பொருட்களை ஏலம் விட்ட அனுபவம் இவருக்கு ஐபிஎல் போன்ற ஏலத்தை எளிதாக கையாள உதவுகிறது எனலாம். முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ப்ரோ கபடி லீக் ஏலத்தை நடத்தினார். அதேபோல் மகளிர் பிரிமியர் லீக் ஏலங்களையும் இவரே நடத்தி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் ஆகியவற்றை நடத்தியவர். இன்று 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தையும் நடத்தவுள்ளார்.
பஞ்சாப்புக்கு நடந்த சம்பவம்: கடந்த 2024ஆம் ஆண்டு மினி ஏலத்தின் போது பஞ்சாப் அணி ஷஷாங் சிங் என்ற பெயர் கொண்ட வேறு ஒரு வீரரை எடுப்பதற்காக, அதே பெயரில் இருந்த மாற்று வீரரை ஏலத்தில் எடுத்துவிட்டனர். அதன் பின்னர் அதை ஏலம் நடத்திக் கொண்டு இருந்த மல்லிகா சாகரிடம் முறையிட்டபோது, விற்கப்பட்ட வீரர் விற்கப்பட்டவர் தான். அதை மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டார். மல்லிகாவின் இந்த தைரியமும் தெளிவும் இன்றைக்கும் பேசு பொருளாகவே இருக்கிறது.