
அதிரடி மன்னன்
பேட்டிங் வரிசையில் 7வது இடத்தில் இறங்கிய பிராஸ்வெல், 78 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்களை குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 10 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். யாருப்பா இந்த வீரர், திடீரென்று எங்கே இருந்து வந்தார் என்ற கோணத்தில் ரசிகர்கள் யோசித்து வந்தனர். இப்படிப்பட்ட வீரரை நியூசிலாந்து எங்கு மறைத்து வைத்திருந்தது என்ற கேள்வி தான் அனைவரின் மனதிலும் ஓடியது.

30 வயதில் அறிமுகம்
இவ்வளவு திறமையான வீரர் தனது 30வது வயதில் தான் நியூசிலாந்து அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார் என்பது காலத்தின் கோலம். நமது சூர்யகுமார் யாதவ் மாதிரியே, தாமதமாக தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என ஆல் ரவுண்டர் திறமையுடன் இருக்கும் பிராஸ்வெல்லை, ஐபிஎல் தொடரில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது தான் பெரிய கொடுமை.

முதல் சதம்
ஐதராபாத்தில் நேற்று பிராஸ்வெல் ஆடிய அதிரடி ஆட்டம் முதல் முறை அல்ல. அயர்லாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 301 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி, 120 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த மைக்கேல் பிராஸ்வெல் , அதிரடியாக சதம் விளாசி, ஒரு நாயகன் உதயமாகிவிட்டான் என்பதை உணர்த்தினார்.

ஐபிஎல் அணிகள் திட்டம்
தற்போது அதே போன்ற ஒரு அதிரடி ஆட்டத்தை பிராஸ்வெல் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரு தங்கமான வீரரை எடுக்காமல் விட்டுடோமே என்று ஐபிஎல் அணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால், அவரை எப்படியாவது அணிக்கு கொண்டு வர ஐபிஎல் அணிகள் திட்டமிட்டுள்ளனர். ஏதாவது ஒரு அணியில் வெளிநாட்டு வீரருக்கு காயம் ஏற்பட்டால் பிராவெல் தான் குறி வைக்கப்படுவார்


Click it and Unblock the Notifications











