மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே ஒவ்வொரு காலத்திலும் இரண்டு சிறந்த வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள். கபில்தேவ்- கவாஸ்கர்,சச்சின்- கங்குலி, தோனி- யுவராஜ் ,விராட் கோலி -ரோகித் சர்மா என்ற இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இந்த சூழலில் இந்திய அணி தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது.
இந்தியாவில் முக்கிய வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இந்த நிலையில் இருவரும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு நாள் விளையாட போகிறார்கள் என தெரியவில்லை.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விராட் கோலியும் ரோகித் சர்மாவும் நீண்ட காலமாக இருந்து வருகின்றனர். ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிவிட்டது. விராட் கோலிக்கு தற்போது 35 வயதாகிறது. இதனால் இருவரும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை விளையாட வாய்ப்பு இருக்கிறது.
இந்த சூழலில் இனி இந்திய கிரிக்கெட்டில் இருவரும் இடத்தையும் நிரப்பப்போகும் வீரர்கள் யார் அடுத்த ரோகித் சர்மா? விராட் கோலி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா, சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், குஜராத் அணியின் கேப்டன் கில் ஆகியோர் தான் அடுத்த விராட் கோலி ரோஹித் சர்மா என பியூஸ் சாவ்லா கூறி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் சுப்மன் கில்லிடம் பேட்டிங் யுக்தி இருக்கிறது. அவருடைய பார்ம் மோசமாக இருக்கலாம். ஆனால் அவரிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்கிறது. அதன் மூலம் அவர் மீண்டும் ரன் குவித்து ஜொலிப்பார். எந்த பேட்ஸ்மேன்களிடம் நல்ல டெக்னிக் இருக்கிறதோ அவர் நீண்ட காலம் ரன்கள் சேர்க்க முடியாமல் தடுமாற மாட்டார்.
இதேபோன்றுதான் ருதுராஜ் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அற்புதமாக விளையாடி தான் ஒரு வித்தியாசமான வீரர் என்பதை நிரூபித்து காட்டுகிறார். என்று பியூஸ் சாவ்லா பதிலளித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
ஆனால் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் மெயின் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய அணிக்காக 25 டெஸ்ட், 47 சர்வதேச ஒரு நாள் மற்றும் 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் கில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடித்திருக்கிறார். ஆனால் ருதுராஜ் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அவர் இந்திய அணிக்காக 6 சர்வதேச ஒருநாள் மற்றும் 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
எனினும் இன்னும் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை. ஐபிஎல் எடுத்துக்கொண்டால் ருதுராஜ் பல்வேறு சாதனைகளை படைத்தது மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். தற்போது ருதுராஜ் மற்றும் கில் என இருவருக்குமே ரசிகர்கள் பட்டாளம் அதிக அளவில் இருக்கின்றன.
ஆனால் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்காமல் பிசிசிஐ துரோகம் செய்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கில்லுக்கு கொடுத்த அதே வாய்ப்பு ருதுராஜ்க்கு கொடுத்திருந்தால் இந்நேரம் அவரும் தன்னுடைய திறமையை நிரூபித்து பெயர் வாங்கி இருப்பார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.