மும்பை: தற்போதைய பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா விரைவில் பதவி விலக இருக்கிறார். அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு தேர்வாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு செல்லும் பட்சத்தில் பிசிசிஐ செயலாளர் பதவி காலியாகும்.
இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் முக்கியமான அந்த பொறுப்பிற்கு அடுத்து வரப் போவது யார்? என்ற கேள்வி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாகவே இந்திய கிரிக்கெட்டின் அசுர வளர்ச்சியையும், கிரிக்கெட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதாலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை நிர்வகித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வந்தார். தற்போது அவர் பிசிசிஐ-யை விட்டு வெளியேறும் பட்சத்தில் பாஜகவை சேர்ந்த மற்றொருவர் தான் அந்த பதவிக்கு மீண்டும் வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி அந்த பதவிக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹன் ஜெட்லி தற்போது டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா-வுக்கும் பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐ-யை பொறுத்தவரை தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளே முக்கியத்துவமான பதவிகளாக உள்ளன.
தற்போது பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ளது. அதுவரை அந்த பதவியில் அவர் தொடர்வார். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக 36 வயதாகும் ஜெய் ஷா நியமிக்கப்பட்டால் இளம் வயதில் தலைவர் பதவியை பிடித்து சாதனை செய்வார். மேலும், ஐசிசி தலைவராக இருந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் பெறுவார். முன்னதாக ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன், ஷஷான்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக இருந்துள்ளனர்.