சென்னை: டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்திருக்கிறது. கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் என்று அஸ்வின் இரட்டை பணிகளை செய்து திண்டுக்கல் அணியை வெற்றிபெற வைத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த டிஎன்பிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் போது திண்டுக்கல் அணியின் சரத் குமாரை ஓய்வறையில் இருந்து அஸ்வின் மிரட்டுவது போல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதனை சில ஆங்கில மீடியாக்கள் அஸ்வின் இளம் வீரர்களை மதிக்காமல் அவர்களை மிரட்டுவதாக செய்திகளை வெளியிட்டன.

இந்த நிலையில் திண்டுக்கல் வீரர் சரத் குமார் குறித்து அஸ்வின் பேசுகையில், ஏராளமான வீரர்களை டிரையல்ஸ் வைத்து டிஎன்பிஎல் தொடருக்கு தேர்வு செய்து வருகிறோம். அப்போது தமிழ்நாடு அணியில் எஸ்எஸ் ராஜன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது 5 ரஞ்சி வீரர்களை ஸ்பெஷலாக அந்த தொடரை கண்காணித்து ஸ்கவுடிங் செய்ய கூறியிருந்தேன்.
அதில் பலரும் சரத் குமாரின் கால் நகர்த்தல், ரிவர்ஸ் ஸ்வீப், கிரிக்கெட் குறித்த அறிவு உள்ளிட்டவற்றை குறித்து வைத்திருந்தனர். இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவர் குறித்து விசாரிக்கையில் அவர் ஒரு பிடி மாஸ்டராக பணியாற்றி வருகிறார் என்பது தெரிய வந்தது. அந்த சம்பளத்தை நம்பி தான் அவரின் குடும்பத்தினர் இருந்தனர்.
இதன்பின் அவரை சென்னை வருமாறு அழைத்தேன். அவர் பிடி மாஸ்டராக எவ்வளவு சம்பளம் வாங்கினாரோ, அந்த சம்பளத்தை நான் கொடுத்து அவரை பயிற்சிக்கு அழைத்து வந்தேன். பயிற்சியின் போது கால்களை பின் கொண்டு சென்று மிட் விக்கெட்டில் பகுதியில் அடித்த பந்தை அப்படியே ஸ்கொயர் திசையில் அடிக்க முடியுமா என்று கேட்டேன்.
அதனை சரத் குமார் உடனடியாக செய்தார். கிரிக்கெட் என்பது நமது திறமை மட்டுமல்லாமல், சொல்வதை கேட்டு அதற்கு தகுந்தவாறு விளையாடுவதும் தான். இந்த டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணி அதிகளவிலான கேட்ச்களை கோட்டைவிட்டது. ஆனால் இறுதிப்போட்டியில் சரத் குமார் பாய்ந்து பாய்ந்து ஃபீல்டிங் செய்தார். என்னை நம்பி விடுங்கள் அண்ணா.. உயிரை கொடுத்து விளையாடுகிறேன் என்றார்.
ஒரு பிடி வாத்தியராக இருந்து கொண்டு இன்று இந்தியளவில் கவனிக்கப்படும் வீரராக மாறியுள்ளார். இந்த கதையே என்னை கொஞ்சம் நெகிழ வைக்கிறது. சரத் குமாரின் கதையை கூறும்போதே எமோஷனலாக உள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.