ஐபிஎல் தொடரில் 10 டாட் பால்கள் வீசினாலே பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதுவரை 4 ஓவர்களில் அதிகபட்சமாக தீபக் சஹர் மட்டுமே 20 டாட் பால்களை ஒருமுறை வீசி இருக்கிறார். வேறு எந்த பவுலரும் இதுவரை 20 டாட் பால்களை ஐபிஎல் தொடரில் வீசியதே இல்லை. அதன் காரணமாக சென்னை அணி தீபக் சஹரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியது.
இந்த நிலையில் தீபக் சஹரின் சாதனைக்கே ஆஸ்திரேலிய இளம் வீரர் ஒருவர் சவால் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் தி ஹண்ட்ரட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு எதிரான போட்டியில் ஓவல் இன்கிரெடிபில்ஸ் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஓவல் இன்கிரெடிபில்ஸ் அணி 100 பந்துகளில் 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமான கிளாஸன் 60 ரன்கள் சேர்த்தார்.

இதன்பின் களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல் அணி முதல் சில ஓவர்களிலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. கிட்டத்தட்ட 60 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் 27 வயதாகும் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரரான ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச வந்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே எதிரணி பேட்ஸ்மேன்களை திணறி போயினர்.
ஒவ்வொரு பந்திலும் ஆக்ரோஷமும், வேகமும் வெறித்தனமாய் வந்த நிலையில், 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்ந்தது. தொடர்ந்து இவர் வீசிய 20 பந்துகளில் ஒரேயொரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. மீதமுள்ள 19 பந்துகள் டாட் பாலாக மாறின. இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, ஸ்பென்சர் ஜான்சன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் 27 வயதாகும் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணிக்காக அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது தெரிய வந்துள்ளது. பந்துவீச்சு ஸ்டைலில் மிட்செல் ஜான்சன் வழியாக மிட்செல் ஸ்டார்ட் எப்படி வந்தாரோ, அதேபோல் ஸ்பென்சர் ஜான்சனும் காணப்படுகிறார். இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் ஸ்பென்சர் ஜான்சனின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.