இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் 27 வயதாகும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவர் யார், இந்திய அணிக்கு எதிராக அறிமுகமானது ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்பென்சர் ஜான்சன், கேமரூன் க்ரீன், ஹேசல்வுட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதில் 27 வயதாகும் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவர் வீசிய முதல் ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரிகளை விளாசினாலும், பின்னர் 2வது ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இவரின் பந்துவீச்சை விடவும் இவரின் ஆக்ஷன் தான் ஸ்பென்சர் ஜான்சன் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு பின் அதேபோன்ற ஆக்ஷனில் ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுகிறார்.
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஹன்ட்ரட் லீக் தொடரில் ஸ்பென்சர் ஜான்சன் ஓவல் அணிக்காக விளையாடினார். இந்த தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஸ்பென்சர் ஜான்சன் 20 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 19 டாட் பால்களை வீசி மிரட்டினார். இது இங்கிலாந்து மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தியது. இதன் காரணமாக உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஸ்பென்சர் ஜான்சனை ஆஸ்திரேலிய அணி அறிமுகம் செய்துள்ளது. உலகக்கோப்பை அணியில் ஸ்பென்சர் ஜான்சன் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், மிட்செல் ஸ்டார்க்கிற்கு பேக் அப் வீரராக ஜான்சன் பார்க்கப்படுகிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள் திணறுவதை தொடர் கதையாகி வருகிறது. இதனால் ஸ்டார்க்கை மறைத்து வைக்கவும், ஸ்பென்சர் ஜான்சனை ஆஸ்திரேலிய அணி பயன்படுத்தி வருகிறது.