எனது மாணவன் அஸ்வினுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.. நெகிழும் சுனில் சுப்பிரமணியன்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக சுனில் சுப்பிரமணியன், நியமிக்கப்பட்டுள்ளார். அதிகம் பேருக்கு தெரியாத பெயர் என்றால் கூட இவர் ஒரு பன்முக திறமையாளர்.
தமிழகத்தை சேர்ந்த சுனில் சுப்பிரமணியன் தற்போது இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் ஓராண்டுகளாகும். இடது கை ஸ்பின்னராக தமிழகம் மற்றும் தெற்கு மண்டல அணிகளுக்காக 74 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர் இவர்.
மேலாளராக நியமிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவர் முதலில் கூறிய வார்த்தை "மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்பதுதான்.

திடீர் முடிவு
இத்தனைக்கும் ஜூலை 15ம் தேதி தனது செல்போனில் பிசிசிஐ ஆப் வெளியிட்ட ஒரு பாப்அப் மெசேஜை பார்த்த பிறகுதான் இந்திய அணி மேலாளர் பதவிக்கு ஆள் தேடுவது தெரிந்தது சுனில் சுப்பிரமணியத்திற்கு.

நேர்காணல்
ஜூலை 20ம் தேதி சுனில் சுப்பிரமணியன் அப்பதவிக்கு விண்ணப்பித்தார். 25ம் தேதி மும்பைக்கு பறந்த அவர், அங்கு கிரிக்கெட் நிர்வாக கமிட்டியின் டயானா எடுல்ஜி இவரிடம் நேர்காணல் நடத்தினார். இதன்பிறகு பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியிடம் ஸ்கைப் வாயிலாக உரையாடினார் சுனில் சுப்பிரமணியன். இந்த நிலையில் இன்ப அதிர்ச்சியாக இன்று, மேலாளராக நியமிக்கப்பட்ட தகவல் அவருக்கு வந்துள்ளது.

பொறுப்பு ஏற்பு
திங்கள்கிழமை மும்பைக்கு மீண்டும் பறக்க உள்ள சுனில் சுப்பிரமணியன், அங்கு தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார். இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சுனில் சுப்பிரமணியன் இந்திய அணியில் இணைந்துகொள்வார்.

எல்லோருமே எனது மாணவர்கள்தான்
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பயிற்சியாளராக இருந்த சுனில் சுப்பிரமணியனிடம், அதுகுறித்து கேட்டால், "மீண்டும் எனது மாணவனோடு இணைவதில் மகிழ்ச்சி. ஆனால் இப்போது இந்திய அணியிலுள்ள எல்லா வீரர்களுமே எனக்கு மாணவர்கள்தான்" என்கிறார் புன்னகையோடு. மேலும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக்கொண்டால் ஸ்பின் பந்து வீச்சின் சூட்சுமங்களை சொல்லிக்கொடுக்கவும் தான் தயாராகவே இருப்பதாக கூறுகிறார் சுனில் சுப்பிரமணியன்.


Click it and Unblock the Notifications