அட அதுக்கெல்லாம் தம்பி சரிப்பட்டு வர மாட்டாருங்க.. என்ன இப்படி சொல்லிட்டீங்க ஸ்மித்?
ஜோஹன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு குவின்டன் டி காக் கேப்டனாக முடியாது என்று முன்னாள் வீரரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநருமான கிரீம் ஸ்மித் கூறியுள்ளார்.
டி காக்கை டெஸ்ட் கேப்டனாக்கி அவரது தலையில் அதிக பளுவை ஏற்ற நாங்கள் விரும்பவில்லை. இந்த காரணத்தால்தான் அவரை கேப்டனாக்க நாங்கள் யோசிக்கிறோம் என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.
2017 முதல் தென்னாப்பிரிக்க டெஸ்ட் கேப்டனாக பாப் டூ பிளசிஸ் இருந்து வருகிறார். தற்போது டி20 மற்றும் ஒரு நாள் அணிக்கு கேப்டனாக உள்ள டி காக்கை டெஸ்ட் கேப்டனாகவும் மாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அதை ஸ்மித் மறுத்துள்ளார்.

ஸ்மித் திட்டவட்டம்
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில், நிச்சயம் டி காக் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார். ஆனால் டெஸ்ட் கேப்டனாக இருக்க மாட்டார். அவருக்கு சுமை கூடியுள்ளது. டிகாக் சிறப்பாக விளையாடும் வீரர். அவர் அதில் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். அவரது பேட்டிங் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் தலைமை தாங்குவது என்பது சிரமமானது என்றார்.

இந்தியா, நியூசிலாந்தில் நடைமுறை
தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகளில் மட்டுமே ஒரே கேப்டன் முறை அமலில் உள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் கூட முன்பு அப்படித்தான் இருந்தது. 2011 உலகக் கோப்பைப் போட்டியுடன் ஸ்மித் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியை கைவிட்டார். அதன் பின்னர் அவரது இடத்திற்கு ஏபி டிவில்லியர்ஸ் வந்தார். அவரே டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். பின்னர் படிப்படியாக அதை பாப் டூ பிளசிஸிடம் அதை அவர் ஒப்படைத்தார்.

ஸ்மித் விளக்கம்
இடையில் சோஹன் போத்தா, ஹஷிம் அம்லா ஆகியோர் டி20, டெஸ்ட் கேப்டனாக வலம் வந்தனர். தற்போது பாப் டு பிளஸிஸ் டெஸ்ட் கேப்டனாக இருக்கிறார். டி காக் ஒரு நாள் மற்றும் டி20 கேப்டனாக வலம் வருகிறார். அவருக்கு டெஸ்ட் கேப்டன் பதவியும் தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதால்தான் ஸ்மித் இப்படி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் தலைவலி
தென்னாப்பிரிக்காவுக்கு இது மட்டும் இப்போது சிக்கல் இல்லை. நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களான பிலான்டர், ஹஷிம் அம்லா, டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். இம்ரான் தாஹிர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். டி20ல் தொடர்கிறார். ஜேபி டுமினி கடந்த ஆண்டு ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

கேப்டனை தேர்ந்தெடுக்க அவகாசம்
தற்போதைய நிலையில் ராசி வான் டெர் டுசன் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரில் ஒருவர் அடுத்த டெஸ்ட் கேப்டனாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். தொடர்ச்சியாக ரன் குவிப்பிலும் ஈடுபடுகின்றனர். அதிலும் ராசி, 2019ல் பாப் டூபிளஸுக்கு அடுத்து அதிக ரன்களைக் குவித்தவராக விளங்குகிறார். புதிய கேப்டன் எப்போது நியமிக்கப்படுவார் என்று தெரியவில்லை. ஆனால் தற்போது லாக் டவுன் தொடர்வதால் அவர்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications