இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதிக்கு பதில் அக்.14ஆம் தேதி நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வேறு சில போட்டிகளும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பைத் தொடர் அட்டவணையில் பிசிசிஐ விளையாடி இருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை அட்டவணை உருவாக்கியவர்களை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் வெளுத்து வாங்கியுள்ளார். அதில், இந்திய அணி 11 போட்டிகளிள் விளையாடுகிறது என்று வைத்துக் கொண்டால் 11 முறையும் பயணம் மேற்கொள்ளக் கூடிய வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அட்டவணையை தயாரித்தார்கள்? அக்.8ஆம் தேதி சென்னையில் இருக்கும் இந்திய அணி, அடுத்ததாக டெல்லிக்கும், அதன்பின் அகமதாபாத்திற்கும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தரம்சாலாவில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா மாநிலத்திற்கு பயணிக்க வேண்டிய நிலையில் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல் இரு கடினமாக அட்டவணையை பார்த்ததே இல்லை. இந்திய வீரர்களின் ஆட்டத்தை மேம்படுத்தும் வகையில் பயணத்தை குறைத்து அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிசிசிஐ அப்படி எதையும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்திய அணி 10 ஆண்டுகளாக அடைந்து வரும் தோல்விகள் பற்றிய கேள்விக்கு, இந்திய கிரிக்கெட் அணி சிறந்த ஆட்டத்தை விளையாடி வருவதாக நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரிலும் அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் தான் தோல்வியை சந்திக்கிறோம். அதனை இம்முறை சொந்த மண்ணில் மாற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.