சச்சின் முதல் குஷ்புவரை... டோணியின் டெஸ்ட் துறவரம் குறித்து பிரபலங்கள் கருத்து!
டெல்லி: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி அறிவித்துள்ளது பல முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிலர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். டோணி திடீரென இந்த முடிவை எடுத்ததை பல பிரபலங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் இன்னும் எந்த கருத்தை சொல்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.
டோணியின் ஓய்வு குறித்து டிவிட்டரில் பல்வேறு பிரபலங்களும் கூறியுள்ள கருத்துக்கள் இவைதான்:
சச்சின் டெண்டுல்கர்
சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்காக டோணிக்கு பாராட்டுகள். உங்களோடு விளையாடிய தருணங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அடுத்த குறி 2015 உலக கோப்பையாக இருக்க வேண்டும், எனதருமை நண்பரே. இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.
அனில் கும்ப்ளே
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோணி ஓய்வை அறிவித்துள்ளார். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது பாக்கியுள்ளது. அருமை நண்பா, சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸ். வாழ்த்துகள்.
முகமது கைப்
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள் டோணி. கேப்டனாகவும், நல்ல வீரராகவும் இந்திய அணிக்கு பங்களிப்பை கொடுத்துள்ளீர்கள். புதிய தலைமைக்கான சிறப்பான மேடை அமைத்து கொடுத்துள்ளீர்கள்.
சஞ்சய் மஞ்சரேக்கர்
டோணியின் ஓய்வு எனக்கு சிறிது வருத்தத்தை தந்துள்ளது.
இங்கிலாந்து மாஜி கேப்டன் மைக்கேல் வாகன்
டோணி விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விராட் கோஹ்லி இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமையேற்க இதுதான் தக்க நேரம். ஒரு புதிய பாதையில் இந்திய அணியை பயணிக்க வைக்க முடியும்.
உமேஷ் யாதவ்
டோணிக்கு எனது வாழ்த்துகள். வரும் நாட்களில் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களை மிஸ் செய்யப்போகிறோம், 'கேப்டன் கூல்'.
இலங்கை முன்னாள் வீரர் ரசல் அர்னால்ட்
புத்தாண்டில் இருந்து புதிய சகாப்தம் இந்தியாவுக்கு. டோணியின் முடிவு ஆச்சரியம் அளித்தாலும், சரியான முடிவுதான். அருமை டோணி.
ஆஸி. மாஜி வீரர் மற்றும் டிவி வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ்
அருமையான டெஸ்ட் வாழ்க்கை டோணிக்கு. தனது ரசிகர்களிடம் ஆலோசித்துவிட்டு ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை, இனிமேல் அதை செய்வார்.
நடிகை குஷ்பு
இந்திய கிரிக்கெட்டின் தலை சிறந்த கேப்டன்களில் நீங்களும் ஒருவர். விளையாட்டின் ஆன்மாவை உயிர்ப்போடு வைத்திருந்தமைக்காக நன்றி. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார். இதற்கு முந்தைய தனது டிவிட்டில், டோணி தனக்கு சரியென்று பட்டதை செய்துள்ளார். அதில் சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். இன்னும் சில காலம் தள்ளி இம்முடிவை எடுத்திருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications