மும்பை: அண்மையில் ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதற்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக வெறும் 10 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ருதுராஜ் கெய்க்வாய் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், சுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் வரிசைக் கட்டி நிற்கும் நிலையில், இவர்கள் அனைவருக்கும் முன் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாய் பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ கேப்டனாக நியமித்ததன் மூலம் சென்னை அணியில் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. தோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜாவையே மீண்டும் தேர்வு செய்ய அதிகளவு வாய்ப்புகள் இருந்தது. கடந்த சீசனில் ஜடேஜாவை தூக்கி கொண்டாடியதன் மூலம் தோனி மறைமுகமாக இதனை அறிவித்துவிட்டார் என்றே பார்க்கப்பட்டது.
ஆனால் ஏசியன் கேம்ஸ் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றால், அடுத்த கேப்டனாக சென்னை அணி யாரை தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வாழ்வில் பெரியளவில் கேப்டன்சி அனுபவமே இல்லாத ஜடேஜா முதல்முறையாக சிஎஸ்கே கேப்டனாக பதவியேற்ற போது, தொடர் தோல்விகளை அடைந்தார்.
ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா, புனே, உள்ளூர் டி20 அணி என்று பல்வேறு அணிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்று அசத்தி வருகிறார். கிட்டத்தட்ட தோனியை போலவே பெரியளவு பதற்றத்தை வெளிக்காட்டாமல் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் செயல்பட்டு வருகிறார். அதேபோல் சர்ச்சைகளில் சிக்காத வீரர் என்ற பெயரும் ருதுராஜ் கெய்வாட்-க்கு கூடுதலாக உள்ளது.
26 வயது மட்டுமே ஆகியுள்ளதால் சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாகவே ருதுராஜ் கெய்க்வாட் பார்க்கப்பட்டு வருகிறார். இதனால் பிசிசிஐ எடுத்த முடிவால் ஜடேஜா - ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரில் சென்னை அணி யாரை கேப்டனாக நியமிக்கும் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.