ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டோணி மீண்டும் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை ரோஸ் டைலரை ரன்அவுட் செய்து நிரூபித்திருக்கலாம். ஆனால் அவராலும் கிரிக்கெட்டில் இயலாத விஷயம் ஒன்று உண்டு என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
பவுண்டரி எல்லையிலிருந்து குல்கர்ணி வீசிய பந்தை லாவகமாக பிடித்து ஸ்டெம்பை பார்க்காமலே பின்புறமாக அடித்து டெய்லரை அவுட் செய்து அசத்திய டோணியிடம், போட்டி முடிந்த பிறகு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

நீங்கள் ஏன் விக்கெட் கீப்பர் பணியை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்பதுதான் அந்த கேள்வி. டோணி இப்போதெல்லாம், கோஹ்லிக்கு அடுத்தபடியாக 4வது வரிசையில் களமிறங்க ஆரம்பித்துள்ளது இந்த கேள்வியை கேட்க அந்த தொகுப்பாளரை தூண்டியிருக்க வேண்டும்.
கேள்விக்கு, பதிலளித்த டோணி, "அப்படியானால் எனக்கு பதிலாக யார் ஃபீல்ட் செய்வார்கள்.." என்று சிரித்தபடியே கேட்டார். எனக்கு ஃபீல்டிங் சுத்தமாக வராது. எனவே எனக்கு பதிலாக ஒரு ஃபீல்டரை மாற்று வீரராக களமிறக்க வேண்டும். அதற்கு அனுமதி கிடைக்காது. எனவே நான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றார் புன்முறுவலுடன்.
என்னதான் உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பராக டோணி விளங்கிக்கொண்டிருந்தாலும், ஃபீல்டிங் செய்வது என்பது அதிலிருந்து மாறுபட்ட செயல். இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை கிரிக்கெட் ஆடி பழகியவர்கள் உணர முடியும். எனவே டோணி கூறியதில் உண்மை இருக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் வர்ணணையாளர்கள்.