அந்த வீரரை ஏன் தெரியுமா டீமை விட்டு தூக்குனோம்? 2019 உலகக்கோப்பை சர்ச்சைக்கு இதுதான் காரணம்!
மும்பை : 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அது ரசிகர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை தொடருக்கு முன் ஓராண்டாக அணியில் இடம் பெற்று வந்த அம்பதி ராயுடு திடீரென உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக அனுபவம் குறைந்த விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அது அப்போது சர்ச்சை ஆனது.

நான்காம் வரிசை பேட்ஸ்மேன்
இந்திய அணிக்கு நீண்ட காலமாக நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையவில்லை. 2017இல் யுவராஜ் சிங் அணியை விட்டு நீக்கப்பட்ட பின் அந்த இடம் காலியானது. அதன் பின் அந்த இடத்துக்கு நிரந்தர வீரர்கள் யாருமே அமையவில்லை.

சிறப்பாக பேட்டிங் செய்தார்
பல வீரர்களும் பயன்படுத்திப் பார்க்கப்பட்ட பின் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்த அம்பதி ராயுடுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் சிறப்பாகவே பேட்டிங் செய்தார். அதனால் அவர் தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் என பலரும் முடிவு செய்தனர்.

அணியில் நீக்கம்
ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதன் பின் உலகக்கோப்பை அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் ஆல் - ரவுண்டர் விஜய் ஷங்கர் இடம் பெற்றார்.

3டி வீரர்
விஜய் ஷங்கருக்கு அனுபவம் குறைவு. ஆனால், அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று வகையில் சிறந்தவர் என குறிப்பிட்டு அப்போதைய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அவரை 3டி வீரர் என குறிப்பிட்டார். அதை கிண்டல் செய்தார் அம்பதி ராயுடு.

மற்றொரு சர்ச்சை
அதனால், அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு நடுவே அணியில் மாற்று வீரர் தேவைப்பட்ட போதும் அம்பதி ராயுடுவை தேர்வுக் குழு அழைக்கவில்லை. அதுவும் சர்ச்சை ஆனது. அது குறித்து தற்போது அந்த தேர்வுக் குழுவில் இடம் பெற்று இருந்த உறுப்பினர் காகன் கோடா விளக்கம் அளித்துள்ளார்.

தன்னம்பிக்கை இல்லை
"அம்பதி ராயுடு அனுபவம் வாய்ந்த வீரர். நாங்கள் உலகக்கோப்பையை எதிர்நோக்கி இருந்தோம். ஒரு ஆண்டு அவரை நாங்கள் ஆட வைத்தோம். ஆனால், அவரிடம் தேக்கம் இருந்தது. உலகக்கோப்பைக்கு செல்ல தேவையான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை என நாங்கள் கருதினோம்." என கூறினார் காகன் கோடா.

ஓய்வு முடிவு
இந்த விளக்கமும் சரியானதாக இல்லை என்பதே உண்மை. அம்பதி ராயுடு உலகக்கோப்பை தொடரில் மாற்று வீரராக கூட தன்னை அழைக்கவில்லை என வெறுப்பில் ஓய்வை அறிவித்து இருந்தார். பின்னர் ஓய்வு முடிவை பின் வாங்கிக் கொண்டு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார்.


Click it and Unblock the Notifications