இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக்கு வழங்கப்பட்ட ஜெர்சி முழுமையாக காவி நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் ஜெர்சி என்றாலே அது நீல நிறத்தில் தான் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் பயிற்சிக்கான ஜெர்சியும் நீல நிறத்தில் வழங்கப்பட்டிருந்தது.
இதனை தற்போது பிசிசிஐ காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதனை ஏற்கனவே ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். பலரும் இந்தியனின் ஜெர்சியை ஸ்விகி ஊழியர்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணி இன்று சென்னையில் தங்களது பயிற்சியில் ஈடுபட்டார்கள். இந்திய அணி வீரர்கள் அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு பேட்டிங் பந்துவீச்சு பில்டிங் என மூன்றுக்குமே பயிற்சி செய்து வந்தனர்.
இந்த பயிற்சிக்கு முன் ராகுல் டிராவிட் வீரர்கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி பல அறிவுரைகளை வழங்கினார். அப்போது வீரர்கள் அனைவரும் காவி நிற ஜெர்சியை அணிந்திருந்தார்கள். மேலும் இந்திய அணி வீரர்கள் மிகவும் நேசிக்கும் நீல நிற தொப்பிக்கு பதிலாக பயிற்சியில் கூட அந்த தொப்பி காவி நிறமாக மாற்றப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மட்டும் காவி நிற தொப்பிக்கு பதில் நீல நிற தொப்பியை அணிந்து பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வின் பல போராட்டத்திற்குப் பிறகு இந்திய ஒரு நாள் அணியில் இடம் பிடித்திருக்கிறார்.இதனால் அந்த நீல நிற தொப்பியின் மதிப்பு அஸ்வினுக்கு நன்றாகவே தெரியும்.
இதற்கு காரணமாகவே காவி நிற தொப்பிக்கு பதில் நீல நிறத் தொப்பியை அஸ்வின் அணிந்திருப்பதாக அவர்களுடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் வரும் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த தொடரை வெற்றியுடன் இந்தியா தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.