அகமதாபாத்: சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய போது கேப்டன் தோனியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், ஆட்டம் பரபரப்பானது. எப்போதும் நிதானம் காக்கும் தோனி, அந்த நேரத்தில் பரபரப்பானது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கு பின் ஜடேஜாவை தூக்கிய போது திடீரென எமோஷனலான தல தோனியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற போது கூட தோனி, பெரிதாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டதில்லை.

ஆனால் 5வது முறை ஐபிஎல் கோப்பை தோனிக்கு உணர்வுப்பூர்வமாக மாறியுள்ளது. இதனால் தோனி ரசிகர்களும் நெகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னதான் தோனி மீண்டும் அடுத்த சீசனில் விளையாட முயற்சிப்பேன் என்று கூறினாலும், விளையாட்டு வீரனின் இறுதி வெற்றிக்கு பின் வரும் கண்ணீரே தோனியின் கண்களில் இருந்து வந்ததாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள். இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது சந்தேகமே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.