சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கும் அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் மோதல் ஏற்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா சரியாக விளையாட வில்லை என்பதால் அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திலும் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் சிஎஸ்கே அணி பிராவோ போன்ற வீரர்களை பயிற்சியாளராக சேர்த்த நிலையில் ரெய்னாவுக்கு சிஎஸ்கே நிர்வாகம் அந்த வாய்ப்பைக் கூட கொடுக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் சிஎஸ்கே அணி டெக்ஸாஸ் நகரத்தை மையமாக வைத்து ஒரு அணியை வாங்கி இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு அமெரிக்காவில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று சிஎஸ்கே அணியில் பயிற்சியாளராக இருந்த பிராவோக்கும் டெக்ஸாஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் ரெய்னாவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெறும் என ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ரெய்னாவை சிஎஸ்கே உட்பட எந்த அணியும் சேர்க்கவில்லை.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவர் மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் தொடர்களில் விளையாடலாம். ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு ரெய்னாவுக்கு கிடைக்கவில்லை. அண்மையில் இலங்கையில் நடைபெற உள்ள டி20 தொடருக்காக ரெய்னா தனது பெயரை பதிவு செய்திருந்த நிலையில், அதிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ரெய்னா இலங்கைத் தொடரை விட்டு விலகி விட்டார் என கூறப்பட்டது.
ஆனால் அமெரிக்கா மேஜர் கிரிக்கெட் லீக் தொடரிலும் ரெய்னாவை சிஎஸ்கே அணி பயன்படுத்தாதது அவர்கள் இருதரப்புக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது. இதனால் ரெய்னா அப்படி என்ன தவறு செய்தார். அவரை ஏன் சிஎஸ்கே அணி நிர்வாகம் இப்படி தனியாக விட்டது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக இரத்தம் சிந்தி விளையாட வீரர்களில் ரெய்னாவும் ஒருவர். சிஎஸ்கே அணியின் ஜாம்பவனாக இருக்கும் அவர் தற்போது அந்த அணியால் கண்டுகொள்ளப்படாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.